அஜீத் படம் வெளியாகும் தியேட்டருக்கு அஜீத் பெயரிலேயே வெடிகுண்டு மிரட்டல்

புதன், 28 ஜனவரி 2015 (22:56 IST)
அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் ஃபெப்ரவரி 5 திரைக்கு வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னை உதயம் திரையரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், என்னை அறிந்தால் படம் வெளியாகும் அன்று உதயம் திரையரங்கு உள்பட 8 திரையரங்குகளில் குண்டு வெடிக்கும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை அனுப்பியவர் முகவரியில் அஜீத், திருவான்மியூர் என நடிகர் அஜீத்தின் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதம் கிடைத்த உடன் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் உதயம் திரையரங்குக்கு வந்து சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடிதத்தை யார் அனுப்பியிருப்பார்கள் என்று தீவிர  விசாரணை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்