ஆடை படத்தால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா ? – அமலா பால் நீண்ட விளக்கம் !

வியாழன், 27 ஜூன் 2019 (13:25 IST)
நடிகை அமலாபால் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டது குறித்து நீண்ட அறிக்கை மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு அமலாபால் ஒப்பந்தமானார். ஆனால் திடீரென அந்தப்படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தேதிகள் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக நடிகை மேகா ஆகாஷ் அந்தப்படத்தில் நடிக்க பந்தமாகியுள்ளார்.

ஆனால் இந்த நீக்கத்துக்குக் காரணம் தேதிகள் பிரச்சனை இல்லை என்று அமலா பால் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘விஜய் சேதுபதி படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன். அதற்குக் காரணமாக நான் தயாரிப்பு நிறுவனத்துக்கு சரியாக ஒத்துழைக்க வில்லை எனக் கூறியுள்ளனர். நான் இதுவரை நடித்த எந்த தயாரிப்பு நிறுவனமும் இந்த மாதிரிக் குற்றச்சாட்டை வைத்ததில்லை. நான் ஒத்துக்கொண்ட படங்களுக்காக என் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளேன். பலமுறை என் தயாரிப்பாளர்களுக்கு உதவும் பொருட்டு என் சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன். நான் தற்போது விஜய் சேதுபதி படத்துக்காக மும்பையில் ஆடை வாங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இப்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குக் காரணமாக சமீபத்தில் வெளியான ஆடைப் படத்தின் டீசரேக் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இருந்தால் அது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஆணாதிக்க, பழமைவாத மனநிலையையேக் காட்டுகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் எதுவும் சொல்லவில்லை என்றும் அவருடன் நடிக்கும் நாளை எதிர் நோக்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்