பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கேரளாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பதற்கான துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதைவிட மோசமான சம்பவங்கள் பெண்களுக்கு நடந்துள்ளன. அவற்றை மறைத்து, பினராய் விஜயனை குற்றஞ்சாட்டினார் குஷ்பு. கோழிக்கோட்டில் காங்கிரஸ் ஒருங்கிணைத்த கூட்டத்தில் இந்த கேலிக்கூத்து நடந்தது.
"கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள், கற்பழிப்புகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டது. பகலில் கூட நடமாட முடியாத நிலை உள்ளது. பினராய் ஆளும் கேரளம் கொடும் கிரிமினல்கள், குற்றவாளிகள் ஆளும் கேரளாவாக மாறி உள்ளது. எந்தவொரு இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆளும் மாநில அரசே குற்றவாளிகளுக்கு உறுதுணையாக உள்ளது. சினிமா பார்த்து யாரும் கெட்டுப்போவதில்லை. கேரளாவில் திருமணம் ஆகாத இளம் நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பினராய் விஜயன் செயல்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது" என்று குஷ்பு உளறிக் கொட்டினார்.
பாவனா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைய முயன்ற போது, நீதிமன்றத்துக்குள் புகுந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அது சட்டத்துக்குப் புறம்பானது என்று ஒருபுறம் பினராய் அரசை விமர்சித்து வரும் நிலையில், பினராய் அரசு குற்றவாளிகளுக்கு துணை போகிறது என்று பேசியிருக்கிறார் குஷ்பு. அவரது முதிர்ச்சியற்ற இந்தப் பேச்சு அரசியல் தாண்டி அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.