பாகுபலி ஒரு குப்பைப் படம் - கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர்

செவ்வாய், 6 ஜூன் 2017 (11:27 IST)
பாகுபலி ஒரு மட்டமான படம் என மலையாளத்தில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற அடூர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
2015ம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் உலக அளவில் பலத்த வரவேற்பை பெற்றதோடு, ரூ.1700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தை பல்வேறு இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், மலையாள சினிமா உலகில் பல தேசிய விருதுகள் மற்றும் மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பழம் பெரும் இயக்குனர் அடூர் பாலகிருஷ்ணன், பாகுபலி படம் ஒரு மோசமான படம் என விமர்சித்துள்ளார்.
 
கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் “எல்லோரும் பாகுபலி படம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். 1951ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி போன்ற ஒரு படம்தான் பாகுபலி. இந்த படத்தால் இந்திய சினிமா துறைக்கு எந்த பயனும் இல்லை. இந்த மாதிரி படங்களை பார்க்க நான் ரூ.10 கூட செலவு செய்ய மாட்டேன்” என அவர் கூறினார்.
 
பாகுபலி படத்தை பலரும் பாராட்டி வரும் வேளையில் அடூர் பாலகிருஷ்ணன் இப்படி கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்