பாலா - அதர்வா - சற்குணம் ... உருவாகும் புதிய கூட்டணி

சனி, 17 மே 2014 (12:08 IST)
களவாணி, வாகை சூட வா படங்களை இயக்கிய சற்குணத்துக்கு நய்யாண்டி பெரும் பின்னடைவாக அமைந்தது. மலையாளத்தில் பல வருடங்கள் முன்பு வெளியான, மேலே பறம்பில் ஆண் வீடு படத்தின் தழுவல்தான் நய்யாண்டி. இந்த மலையாளப் படத்தை ஏற்கனவே தமிழில் வள்ளி வரப்போறா என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர்.
ஏற்கனவே அடித்து துவைத்த கதையை சற்குணம் படமாக்கியது முதல் சறுக்கல். காட்சிகளின் சுவாரஸியமின்மை இரண்டாவது மைனஸ். படத்தின் நாயகி நஸ்ரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் சர்ச்சையும் மூன்றாவது பலவீனம். எல்லாமும் சேர்ந்து சற்குணம் இரண்டு படங்களில் சம்பாதித்த நற்பெயரை காலாவதியாக்கின.
 

 
இந்நிலையில் அவருக்கு உதவ முன்வந்தவர் இயக்குனர் பாலா. பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார் சற்குணம்.

அதில் நாயகனாக நடிப்பது பாலாவின் பரதேசியில் நடித்த அதர்வா. சற்குணத்தின் முதலிரு படங்களுக்கு சிறப்பான இசையை தந்த ஜிப்ரான் இந்தப் பெயரிடப்படாத படத்துக்கு இசையமைக்கிறார்.
 
சற்குணத்தின் இழந்த பெருமையை இந்த புதிய கூட்டணி மீட்டெடுக்கும் என்று நம்புவோம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்