விஷால் அணிக்கு பின்னடைவு - சரத்குமார் அணியில் போட்டியிடப் போகும் தனுஷ், சிம்பு

ஞாயிறு, 19 ஜூலை 2015 (15:32 IST)
நடிகர் சங்கத் தேர்தலில், நாடக நடிகர்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ, அந்த அணியே வெற்றி பெறும். பல வருடங்களாக நாடக நடிகர்களை தனது அபிமானிகளாக தக்க வைத்துக் கொண்டுள்ளார் ராதாரவி. அதன் காரணமாகவே தொடர்ச்சியாக அவர் சார்ந்துள்ள அணி வெற்றி பெற்று வருகிறது.


 

 
இந்த ஆதரவு கோட்டையை உடைக்க விஷால் அணியினர் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஊராகச் சென்று நாடக நடிகர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இன்று அவர்கள் திருச்சி நாடக நடிகர்களை சந்திப்பதாக ஏற்பாடு.
 
இந்நிலையில் திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் சங்கப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.முகமது மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசினார்.
 
திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 248 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 148 பேருக்கு நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குரிமை உள்ளது. அவர்கள் அனைவரும் சரத்குமார், ராதாரவி அணிக்கே வாக்களிப்பர் என்றார்.
 
மேலும், இன்று விஷால் தரப்பினர் அழைப்புவிடுத்திருக்கும் கூட்டத்தில், திருச்சி நாடக நடிகர் சங்கத்தைச் சோந்த யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். 
 
முக்கியமாக, நடிகர் சிம்பு பொருளாளர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்றும், தனுஷும் தேர்தலில் சரத்குமார் அணியில் போட்டியிடுவார் எனவும் அவர் கூறினார்.
 
சரத்குமார் அணியை சிம்பு, தனுஷ் ஆகியோர் ஆதரிப்பது விஷால் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்