உலகத்துக்கே பேரிழப்பு - அப்துல்கலாம் மறைவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்

புதன், 29 ஜூலை 2015 (10:13 IST)
ஆறாத சோகமாக தொடர்கிறது அப்துல் கலாமின் மறைவு. அந்த மாமேதையின் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி விடுத்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது - 
 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், அதன் தலைவர் எஸ்.தாணு தலைமையில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இந்திய திருநாட்டின் குடியரசு தலைவர் பதவிக்கு பெருமை சேர்த்தவர், அப்துல்கலாம். 
 
அவரின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே ஒரு பேரிழப்பாகும். ஓய்வறியாமல் உழைத்து வந்த அந்த மகான் ஓய்வெடுக்க சென்றதுபோல் அவரின் மரணம் அனைவரின் மனதிலும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவரின் 2020-ம் ஆண்டு கனவினை செயல்படுத்துவதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீரால் அஞ்சலி செலுத்துகிறது.
 
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்