வைரமுத்துவுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் இளையராஜா. ஆனால் அவருடன் எப்படியாவது இணைவதற்காக ஆயக்கலைகளில் அறுபது சதவீதத்தை பிரயோகித்துப் பார்த்துவிட்டார் வைரமுத்து. அவரது இன்னொரு முயற்சியின் அண்டர்கிரவுண்ட் மூவ்தான் சீனு ராமசாமி படத்தில் வைரமுத்து வரிகளை இளையராஜா பாடுகிறார் என்பது.
"இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம்பெறுகிறது. இதைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுத, யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்தப் பாடலை யாரைப் பாடவைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா.
இரண்டு பெருங்கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன். ‘பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்' - என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்."
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இளையராஜா, வைரமுத்து பகை என்னவோ இஸ்ரேல், பாலஸ்தீன பகை மாதிரியும் தினம் பல உயிர்கள் பலியாவது போலவும் சீனு ராமசாமி ஃபீல் பண்ற அளவுக்கு ஒன்றும் கெட்டுப் போகலையே. இளையராஜாவும், அவரது ரசிகர்களும் வைரமுத்துவுடன் மீண்டும் சுமூகமாகப் போக விரும்பாத போது மீண்டும் மீண்டும் இளையராஜாவை இப்படி அறிக்கை, பேட்டி என்றெல்லாம் டார்ச்சர் செய்வது அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. சீனு ராமசாமி பகையை முறிக்கிறேன் என்று புதிய பகையை உருவாக்கமலிருக்க கடவுள் அருள் புரியட்டும்.