முடிந்தது தேர்தல் தீபாவளி, தொடங்கியது சினிமா சுற்றுலா

வியாழன், 12 ஜூன் 2014 (12:25 IST)
விஜயகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மனைவி பிரேமலதாவுடன் மலேசியாவுக்கு கிளம்பிச் சென்றார். மச்சினனும், திரளான தொண்டர்களும் கேப்டனையும், அண்ணியையும் வழியனுப்பி வைத்தனர்.
எதற்கு இந்தப் பயணம்?
 
விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் சகாப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மகைனை ஹீரோவாக்க பல வருடங்கள் கதை கேட்ட விஜயகாந்த் இறுதியில் தேர்வு செய்த கதைதான் இந்த சகாப்தம். மகனை எப்படியும் தனது கலையுலக வாரிசாக்க வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருக்கிறார்.
 
தீவிர அரசியலில் ஈடுபடுவதால் இனி சிமாவில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்த விஜயகாந்த் மகனின் திரைப்பிரவேசம் காரணமாக தனது முடிவில் சின்ன திருத்தம் செய்தார். மகன் நடிக்கும் படங்களில் மட்டும் நடிப்பேன் என்று சகாப்தம் தொடக்கவிழாவில் அறிவித்தார்.
 
தற்போது சகாப்தத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடப்பதாகவும் படப்பிடிப்பு எப்படி போகிறது என்பதை மேற்பார்வை செய்யவே விஜயகாந்த் மலேசியா சென்றிருப்பதாகவும் அவரது கட்சிக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
இந்த சினிமா சுற்றுலா பத்து நாள்கள் தொடரும் என தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்