மீண்டும் சுந்தர். சி, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்

திங்கள், 19 மே 2014 (14:00 IST)
பாண்டியநாடு படத்தின் வெற்றி விஷாலின் திரை வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியது. நான் சிகப்பு மனிதன் சுமாராகப் போனதுகூட விஷாலுக்கு பெரிய அடி இல்லை. ஹரியின் பூஜையில் அவர் நடிப்பதைதான் பரபரப்பாக சினிமா உலகம் பேசுகிறது.
பூஜைக்குப் பிறகு புதிதாக இரு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதில் ஒரு படத்தை இயக்குவது சுந்தர். சி.
 
இவரது இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா ஒரு வருடத்துக்கு மேலாகியும் வெளியாகவில்லை. தயாரிப்பாளரின் முந்தைய படங்களின் நஷ்டம் மத கஜ ராஜாவை அழுத்துவதால் படம் இன்னமும் திரைக்கு வராமல் உள்ளது. படத்தை இயக்கிய சுந்தர். சி, நடித்த விஷால் இருவருக்குமே படம் வெளியாகாமலிருப்பது பின்னடைவுதான். அதற்கு பரிகாரமாக மீண்டுமொரு படத்தில் இருவரும் இணைய உள்ளனர்.
 
அதேபோல் பாண்டிய நாடு படத்தை இயக்கிய சுசீந்திரனுக்கு மறுபடியும் விஷால் கால்ஷீட் தந்துள்ளார். பாண்டிய நாடு வெற்றி பெற்றதால் இவர்கள் இணையவிருக்கும் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்