மனைவி மனதளவில் கொடுமைப்படுத்துகிறார் - நடிகர் புகார்

சனி, 7 ஜூன் 2014 (15:34 IST)
நடிகர் திலீப், மஞ்சு வாரியார் கடந்த ஒரு வருடமாக பிரிந்துதான் வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ளப் போவது உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால் விவாகரத்து கதவை யார் முதலில் தட்டுவார்கள் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. நேற்று முன்தினம் திலீப் சஸ்பென்ஸை உடைத்தார்.
1999-ல் திலீப், மஞ்சு வாரியார் திருமணம் நடந்த போது மஞ்சு வாரியார் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக அதன் சிகரத்தில் வீற்றிருந்தார். அவரைப் போல் நடிப்புத் திறமைமிக்க நடிகை அன்று யாருமில்லை. இன்றுவரை அதுதான் நிலைமை.
 
திலீபின் காதலுக்காகவும், குடும்பத்துக்காகவும் தனது சினிமா கரியரை தியாகம் செய்தார் மஞ்சு வாரியார். பல வாய்ப்புகள் அவரை தேடி வந்தும் அவர் நடிக்கவில்லை. அவர்களுக்கு மீனாட்சி என்ற மகளும் பிறந்தார்.
 
சந்தோஷமான 14 வருடங்களுக்குப் பிறகு இல்லறத்தில் புயலடிக்க ஆரம்பித்தது. மஞ்சு வாரியார் மீண்டும் நடிக்க விரும்புகிறார். அதுதான் பிரச்சனைக்கு காரணம் என கூறப்பட்டது. அதற்கேற்ப பரதநாட்டிய அரங்கேற்றம், விளம்பரப் படங்களில் நடித்தது என மஞ்சு வாரியார் நடிப்பை நோக்கி நடைபோடத் தொடங்கினார். சமீபத்தில் அவரது நடிப்பில் ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படமும் வெளிவந்து வெற்றி பெற்றது.
 

அதேநேரம் மஞ்சு வாரியாரின் நடிப்பு ஆசை அல்ல, நடிகை காவ்யா மாதவன் மீதான திலீபின் காதலே குடும்ப வாழ்வில் புயலடிக்க காரணம் என்ற உண்மை தெரிய வந்தது. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். காவ்யா மாதவனின் திருமணம் தோல்வியில் முடிந்து அவர் விவாகரத்து பெற்றுக் கொண்டபின் திலீப் - காவ்யா மாதவன் உறவு நெருக்கமானதாக கூறுகிறார்கள். 
 
கடந்த ஒரு வருடமாக திலீபும், மஞ்சு வாரியாரும் தனித்தே வாழ்கின்றனர். மகள் மீனாட்சி திலீபுடன் உள்ளார்.
நேற்று முன்தினம் எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் மனு ஒன்றை திலீப் தாக்கல் செய்தார். அதில், மனரீதியாக மஞ்சு வாரியார் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விசாரணையை ரகசியமாக நடத்தும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்