பன்னீர் புஷ்பங்களை ரீமேக் செய்யும் சுந்தர். சி?

திங்கள், 21 ஜூலை 2014 (18:17 IST)
1981இல் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தை ரீமேக் செய்யும் எண்ணம் சுந்தர். சி-க்கு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
 
பன்னீர் புஷ்பங்கள் 1981இல் வெளியான படம். சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, அர்ச்சனா, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தானபாரதியும், பி.வாசுவும் பாரதி - வாசு என்ற பெயரில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்கள்.
 
இளையராஜா இசையில் ஆனந்த ராகம், கோடைகால காற்றே, பூந்தளிர் ஆட உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட். இன்றும் அவை காலத்தால் அழியாத பாடல்களாக காற்றில் வலம் வருகின்றன. 
 
1981இல் இளைஞர்களின் விருப்பப்படமாக கொண்டாடப்பட்ட பன்னீர் புஷ்பங்களை சுந்தர். சி ரீமேக் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
சுந்தர். சி கடைசியாக காமெடி ஹாரர் படமான அரண்மனையை இயக்கினார். படம் முடிந்தும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் விஷால் நடிப்பில் ஆம்பள படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். 2015 பொங்கலுக்கு ஆம்பள வெளியாகிறது. இதையடுத்து கலகலப்பு 2 படத்தை அவர் இயக்க அதிக வாய்ப்புள்ளது. அல்லது பன்னீர் புஷ்பங்கள் ரீமேக்கை அவர் இயக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
 
கொசுறு தகவல். பன்னீர் புஷ்பங்கள் 1979இல் வெளியான ஏ லிட்டில் ரொமான்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்