பணம் தராததால் பணயக் கைதியாக மாட்டிக் கொண்ட படக்குழுவினர்

வியாழன், 24 ஏப்ரல் 2014 (11:43 IST)
தயாரிப்பாளர் ஹோட்டல் நிர்வாகத்துக்கு பணம் தராததால் படக்குழுவினர் எவ்வித வசதியும் இல்லாமல் ஹோட்டல் நிர்வாகத்தால் பணயக் கைதியாக வைக்கப்பட்ட கொடுமை மும்பையில் நடந்துள்ளது.
 
தயாரிப்பாளர், இயக்குனர் பி.ரவிக்குமாரை அனைவருக்கும் தெரிந்திருக்கும். நடிகை சுஜிபாலா என்னுடைய மனைவி, அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று சில வாரங்கள் முன்பு சர்ச்சையை கிளப்பியவர். சுஜிபாலா பதிலுக்கு ரவிக்குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தந்தார்.
 
ரவிக்குமார் தற்போது லவ் பண்லாமா வேணாமா என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்துக்காக ஐவர் குழுவுடன் மும்பை சென்றிருக்கிறார்.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகம், நீங்கள் தர வேண்டிய பணம் அதிகமாக இருக்கிறது. அதில் ஒருபகுதியாவது தந்துவிடுங்கள் என்று ரவிக்குமாரிடம் கூறியுள்ளது. சரி என்றவரை மறுநாள் முதல் காணவில்லை. பணம் தராமல் ஹோட்டலிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவருடன் வந்தவர்களில் இருவர் பெண்கள். 
 
ரவிக்குமார் ஹோட்டல் பணம் செட்டில் செய்யாததால் அவருடன் வந்த அனைவரையும் ஹோட்டல் ஊழியர்களுக்கான குடியிருப்பில் ஹோட்டல் நிர்வாகம் தங்க வைத்துள்ளது. உணவு முதற்கொண்டு எவ்வித வசதியும் அவர்களுக்கு தரப்படவில்லை.
 
ரவிக்குமாரை தொடர்பு கொண்டால், தேர்தல் நேரம் என்பதால் பணத்தை செட்டில் செய்ய முடியவில்லை என டபாய்க்கிறார். இந்த சம்பவம் ரவிக்குமார் மீது திரையுலகினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுஜிபாலா விவகாரம் முதற்கொண்டு அனைத்திலும் ரவிக்குமார் மீதான நம்பகத்தன்மையை அவரின் இந்த செயல் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்