படம் வெளியாகும் முன்பே பாராட்டு மழையில் ஏ.ஆர்.முருகதாஸ்

வெள்ளி, 6 ஜூன் 2014 (13:11 IST)
பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். ஹாலிடே படத்துக்காகதான் இந்த பெருமழை.
 
துப்பாக்கி படத்தின் கதையை இந்தியில் எடுப்பதற்காகதான் எழுதினார் முருகதாஸ். அப்போது முன்னணி நடிகர்களின் கால்ஷீட் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க அனைவருக்கும் ஆர்வம் இருந்தாலும் பிற படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அப்படிதான் துப்பாக்கி தமிழில் உருவானது.
இந்திக்கு கச்சிதமாகப் பொருந்தும் துப்பாக்கி இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் அக்ஷய், சோனாக்ஷி நடிப்பில் வெளியாகியுள்ளது. முருகதாஸ்தான் இயக்கம். அதன் ஃப்ரிவியூவை பார்த்தவர்கள் முருகதாஸை வாய் வலிக்க பாராட்டி வருகின்றனர். இன்று படம் வெளியாகும் முன்பே பாராட்டு மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. 
 
பிரபல இந்திப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் முருகதாஸையும் படத்தையும் மனதார பாராட்டியிருக்கிறார். அதேபோல் நடிகர் சத்ருகன் சின்கா முருகதாஸை அடுத்த மணிரத்னம், மேதை என்று பாராட்டியிருக்கிறார். இதேபோல் பலரும் முருகதாஸை பாராட்டி வருகின்றனர்.
 
முருகதாஸின் முதல் இந்திப் படம் கஜினி இந்தியாவில் நூறு கோடி வசூலித்த முதல் படம் என்ற பெயரை பெற்றது. அக்ஷய் படம் எதுவும் இதுவரை 200 கோடிகள் வசூலித்ததில்லை. ஹாலிடே அந்த சாதனையை செய்யும் என்று விமர்சகர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்