தேர்தல் தோல்வி - தியானத்தில் ஆழ்ந்த திவ்யா ஸ்பந்தனா

செவ்வாய், 10 ஜூன் 2014 (12:29 IST)
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. காங்கிரஸ்காரர்களே என்னை தோல்வியடைச் செய்தனர் என்று அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அம்பரீஸே தனது தேர்தல் தோல்விக்கு காரணம் எனவும் திவ்யா ஸ்பந்தனா கூறினார்.
மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திவ்யா வெற்றி பெற்றபோது சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும், மக்கள் பணி ஒன்றே இனி லட்சியம் எனவும் பரபரப்பை ஏற்படுத்தினார். பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தனது முந்தைய தீர்மானங்களை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளார். அதாவது தொடர்ந்து படங்களில் நடிப்பது என முடிவெடுத்துள்ளார். முதல்கட்டமாக மனதை சாந்தப்படுத்த மும்பையில் தியான வகுப்பில் பங்கெடுத்துள்ளார்.
 
மும்பை விபாசானா தியான வகுப்பில் பத்து தினங்கள் மௌன விரதத்துடன் தியானம் இருந்து வருகிறார் திவ்யா. மனதை அமைதிப்படுத்தி தோல்வியிலிருந்து மனதை வெளிக்கொண்டு வரவே இந்த தியான வகுப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார். அடுத்த மாதம் அவர் நடித்த ஆரியன் திரைப்படம் வெளியாகிறது. படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சினிமாவில் தனது ரீ என்ட்ரியை அறிவிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்