தீபாவளிக்கு வெளியாகும் ஷங்கரின் ஐ, கலக்கத்தில் கத்தி, பூஜை

திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (19:28 IST)
தீபாவளிக்கு பூஜை வெளியாகும் என்று விஷால் நடிக்கும் பூஜைக்கு பூஜை போடும் போதே அறிவித்தார் இயக்குனர் ஹரி. அவர்கள் போட்டு வைத்த கர்ச்சீப்புக்கு மேலே துண்டை போட்டது கத்தி டீம். அவர்களும், தீபாவளிக்கு நாங்களும் வர்றோமில்ல என்றனர்.
 
இவ்விரு படங்கள் தீபாவளிக்கு வருவதால் வேறு படங்கள் எதுவும் நேற்று வரை போட்டிக்கு வரவில்லை. ஆனால் இன்று அது பழங்கதை.
நேற்று தெலுங்கு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ஐ படத்தின் பிரத்யேக ட்ரெய்லரை திரையிட்டனர். (தமிழ் பத்திரிகையாளர்கள் மீது என்ன கோபமோ). அப்போது படத்தயாரிப்பு தரப்பு, அக்டோபர் 22 தீபாவளிக்கு ஐ வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது.
 
இந்த அறிவிப்பால் கத்தி, பூஜை இரு படங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் அதிகபட்சம் இரண்டு பிரமாண்ட படங்களை மட்டுமே ஒரே நேரத்தில் வெளியிட முடியும். பின் வாங்கப் போவது கத்தியா இல்லை பூஜையா?
 
முன்னதாக செப்டம்பர் 15 படத்தின் பாடல்களை நேரு உள் விளையாட்டரங்கில் வெளியிடயிருப்பதாகவும், அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் இந்த விழாவில் கலந்து கொள்வார் எனவும் செய்தி கசியவிட்டுள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்