நேற்று விவேக் நடித்த நான்தான் பாலா படம் வெளியானது. அதில் பிராமணராக விவேக் நடித்துள்ளார். தான் நடிக்கிற கதாபாத்திரத்தை சிறப்பிக்க, கவனப்படுத்த அந்த கதாபாத்திரம் சார்ந்த பெருமைகளை (அப்படி ஏதாவது இருந்தால்) பொதுவெளியில் முன்வைத்து படத்தையும், தன்னையும், தனது கதாபாத்திரத்தையும் விளம்பரப்படுத்துவது பொதுவாக ஒரு சினிமா நடிகர் செய்வதுதான்.
நான்தான் பாலாவில் பிராமணராக விவேக் நடித்ததால், படத்துக்காக சமஸ்கிருதம் படித்தேன், சொந்தமாக சமஸ்கிருதத்தில் டப்பிங் பேசினேன் என்றெல்லாம் அவர் பத்திரிகைகளில் கூறி வந்தார். படம் வெளியான நேற்று ஒருபடி மேலேபோய் பண்பலை வரிசை ஒன்றில் பேசிய அவர், சமஸ்கிருதம்தான் உலக மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி, தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்துதான் பிறந்தது என்றார். தான் நடித்தப் படத்தில் சமஸ்கிருதம் வருகிறது என்பதற்காக இப்படியொரு அண்டப்புளுகை அவர் அவிழ்த்துவிட வேண்டியதில்லை. விவேக்கின் இந்தப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கடும் கண்டகம் தெரிவித்துள்ளது.