தமிழில் நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி

புதன், 23 ஜூலை 2014 (17:59 IST)
நேரடி தமிழ்ப் படங்களில் இதுவரை நடித்திராத மிதுன் சக்ரவர்த்தி முதல்முறையாக ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். படம் யாகாவாராயினும் நா காக்க.
 
மிதுன் சக்ரவர்த்தியை கடைசியாக தமிழ் ரசிகர்கள் பார்த்தது மணிரத்னத்தின் குரு திரைப்படத்தில். அதனை நேரடி தமிழ்ப் படம் என்று சொல்ல முடியாது. இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்யப்பட்டது. அதில் பத்திரிகை ஆசிரியராக கம்பீரமான வேடத்தில் அமர்க்களப்படுத்தியிருந்தார் மிதுன்.
 
தன்னுடைய யாகாவாராயினும் நா காக்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் மிதுன் சக்ரவர்த்தி நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று அவரை தொடர்பு கொண்டுள்ளார் இயக்குனர் சத்ய பிரபாஸ். பதினைந்து நிமிடங்கள் நேரம் ஒதுக்கியுள்ளார் மிதுன். பிளைட் ஏறி மும்பை சென்ற சத்ய பிரபாஸிடம் அவர் கேட்ட முதல் கேள்வி, எனக்குதான் நடிக்க சுத்தமா விருப்பமில்லையே. பிறகு எதுக்கு சென்னையிலிருந்து மும்பை வர வந்தீங்க?
 
சத்ய பிரபாஸ் மிதுன் சக்ரவர்த்தியின் கதாபாத்திரம் குறித்து சொல்லியிருக்கிறார். பதினைந்து நிமிடங்கள் என்பது அரை மணி நேரமாகியிருக்கிறது. மொத்த கதையும் சொல்லுங்க என்று அவர் சொல்ல, இரண்டு மணி நேரங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் சத்ய பிரபாஸ். மிதுன் சக்ரவர்த்தி க்ளீன் போல்ட்.
 
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஆதி. சத்ய பிரபாஸ் ஆதியின் சகோதரர். ஒன்றுவிட்ட எல்லாம் கிடையாது, உடன் பிறந்த சகோதரர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்