இந்திய சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் தாங்க முடியவில்லை. இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று எந்த மொழியிலும் வாரிசுகள்தான் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
தெலுங்கு சினிமா இப்போது வாரிசுகளின் பிடியில்தான் உள்ளது. ராம் சரண் தேஜா, நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் என்று முன்னணி இளம் நடிகர்கள் அனைவருமே அப்பா, சித்தப்பாக்களின் சினிமா பிரபலத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.
பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்காராவை நினைவிருக்கிறதா? கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் பாடலில் பிரமாதப்படுத்தியவரை? அன்று தமிழிலும், தெலுங்கிலும் ரங்காராவ் என்றால் தனி மார்க்கெட், தனி ரசிகர் பட்டாளம். அவரின் பேரன் ஜுனியர் ரங்காராவ் என்ற நாமகரணத்துடன் நடிக்க வந்திருக்கிறார்.