சேர்ந்து பொங்க வைக்கும் விஷால், சுந்தர். சி

புதன், 28 மே 2014 (19:53 IST)
அரண்மனை படம் முடிந்ததும் இரு படங்களை இயக்கப் போவதாகவும், அந்த இரண்டிலும் நான் நடிக்கப் போவதில்லை என்றும் சமீபத்திய பேட்டியில் கூறினார் சுந்தர். சி. அந்த இரண்டில் ஒன்று விஷால் நடிக்கும் படம். அதனை விஷாலே உறுதி செய்துள்ளார்.
 
ஏற்கனவே இவர்கள் இணைந்து உருவாக்கிய மத கஜ ராஜா இன்னும் வெளியாகாமல் உள்ளது. தயாரிப்பாளரின் முந்தையப் படங்கள் ஏற்படுத்திய நஷ்டம் மத கஜ ராஜாவுக்கு வில்லனாக அமைய, ஒருகட்டத்தில் அந்த சுமையை தானே தாங்குவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினார் விஷால். 
சில லட்சங்கள் கரைந்ததுதான் மிச்சம். விஷால் தூக்க முடியாத அளவுக்கு இருந்தது கடன் சுமை. அந்த நேரத்தில் விஜயகாந்த் தானே முன்வந்து விஷாலுக்கு கூறிய அறிவுரையின் காரணமாக சில லட்சங்களுடன் மத கஜ ராஜாவை கைவிட்டு கரையேறினார். இன்றுவரை படத்துக்கு விமோசனம் இல்லை.
 
இந்நிலையில் மீண்டும் இணைந்து படம் செய்வது என்று விஷாலும், சுந்தர் சி-யும் முடிவு செய்துள்ளனர். வழக்கம் போல மூன்று மாதங்களில் படத்தை முடித்து 2015 பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக திட்டம்.
 
2014 பொங்கலுக்கு மத கஜ ராஜாவை வெளியிட முடியாமல் போனதால் உண்டான வலிக்கு அடுத்த வருடம் களிம்பு தடவுகிறார்கள். 
 
இதுதான் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்.

வெப்துனியாவைப் படிக்கவும்