தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரையும், தெனாலிராமனையும் கொச்சைப்படுத்தியிருப்பதாகக்கூறி தெலுங்கு அமைப்புகள் படத்தை தடை செய்யக்கோரி வருகின்றன. சென்சாரில் புகாரும் தரப்பட்டது. தெலுங்கு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.
அதனை கண்டித்து சீமான், வ.கௌதமன் போன்றோர் தெலுங்கு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அந்த மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவனர் ஆர்.பாலகுருசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது -
இன்று ‘தெனாலிராமன்’ படத்தை எதிர்ப்பது தெலுங்கு அமைப்புகள் என்றதும் சீமான் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளார். இன்று மட்டும் வடிவேலு தமிழன் ஆகிவிட்டார். கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கும் நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்துக்கும் பிரச்சினை வந்தபோது சீமான் எங்கே சென்றிருந்தார். கமலும், விஜய்யும் தமிழர்கள் இல்லையா?.