மலையாள தனியார் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்து நடிகையானவர் சான்ட்ரா. தமிழ் தனியார் தொலைக்காட்சியில் காம்பியராக இருந்த பிரஜனை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் கணவன், மனைவி இருவரும் தொலைக்காட்சியை துறந்து சினிமாவில் கவனம் செலுத்துகின்றனர்.
சான்ட்ரா தமிழில் நாயகியாக நடித்த படம், சிவப்பு எனக்கு பிடிக்கும். இதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பாலியல் தொழிலை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பது முதலான கருத்துக்களை கொண்ட படம் இது.
இந்நிலையில் இந்தியில் ஆண்டனி டிசோசா இயக்கும் படத்தில் இம்ரான் ஹஸ்மியை காதலிப்பவராக சின்ன வேடம் ஒன்றில் நடிக்க சான்ட்ராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கதைப்படி இந்த கதாபாத்திரம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பப் பெண். அந்த வேடத்துக்கு சான்ட்ரா பொருத்தமாக இருப்பார் என அவரது புகைப்படத்தைப் பார்த்து ஆண்டனி டிசோசா சான்ட்ராவை அணுகியுள்ளார். சின்ன வேடம் என்றாலும் இம்ரான் ஹஸ்மியுடன், இந்திப் படத்தில். யோசிக்கவேயில்லை சான்ட்ரா. உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.