சித்தார்த்தின் ஜிகிர்தண்டா மொட்டை

வெள்ளி, 20 ஜூன் 2014 (11:06 IST)
கதவைத்திற காற்று வரட்டும் வீடியோ புகழ் நித்யானந்தாவும், அவருக்கு பணிவிடை செய்து சர்ச்சையில் மாட்டிய நடிகை ரஞ்சிதாவும் இரண்டுநாள் முன்பு திருப்பதி கோயிலுக்கு விசிட் அடித்தனர். நித்யானந்தாவின் தங்கத்திலான கழுத்து ஆபரணமும், ரஞ்சிதாவின் ருத்திராட்சை மாலையும் செய்திகளில் பெரிதாக அடிபட்டதால் திருப்பதி கோயிலில் சாமி கும்பிட்ட நடிகர் சித்தார்த்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. சித்தார்த் சாமி கும்பிட்டதுடன் முடி தானமும் செய்தார்.
சமீபமாக வதந்திகள் சித்தார்த்தை சுழற்றி அடிக்கின்றன. சமந்தாவுடன் திருமணம், முதல் திருமணத்தில் சித்தார்த்துக்கு ஒரு மகன் இருக்கிறான் என வதந்திகளால் மூழ்கடிக்கப்பட்டார். சிலவற்றுக்கு சீரியஸாகவும், சிலவற்றுக்கு காமெடியாகவும் பதில் தந்து சமாளித்தார். ஆனாலும் மீடியாக்கள் அடங்குவதாக இல்லை.
 
இந்த தொல்லைகளிலிருந்து மீள வெங்கடாசலபதிக்கு அவர் முடிதானம் செய்திருக்கலாம் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் சித்தார்த்துடன் ஜிகிர்தண்டா டீமும் திருப்பதி வந்திருந்தது.
ஆந்திராவிலிருந்து ஜாகையை சென்னைக்கு மாற்றிய சித்தார்த் தமிழில் பலமாக காலூன்ற ஜிகிர்தண்டாவை பெரிதும் நம்பியுள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் இப்படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே சித்தார்த் மொட்டையடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
 
இதுதவிர வசந்தபாலனின் காவியதலைவன், கன்னட லூசியாவின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் சித்தார்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்