சரத்குமார் ஜோடி ஓவியா, மீரா நந்தன் - தொடரும் மலையாள ஆதிக்கம்

புதன், 9 ஜூலை 2014 (18:07 IST)
சரத்குமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு தனி ஹீரோவாக நடிக்கும் படம் சண்டமாருதம். இரு வேடங்களில் சரத்குமார் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை அவரே எழுதியுள்ளார். இதில் அவேரது ஜோடியாக ஓவியா, மீராநந்தன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மலையாளத்தின் முன்னணி தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் தனது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் படங்கள் தயாரித்து வருகிறார். சென்னையில் ஒருநாள் படத்தை லிஸ்டின் ஸ்டீபனும், ராதிகா சரத்குமாரும் இணைந்து தயாரித்தனர். இதில் இனியா, பார்வதி மேனன் நடித்திருந்தனர். அடுத்து சப்பாகுருசு படத்தை லிஸ்டினும், ராதிகா சரத்குமாரும் தமிழில் புலிவால் என்ற பெயரில் தயாரித்தனர். இதில் அனன்யா, இனியா, ஓவியா நடித்தனர். இவ்விரு படங்களிலும் நாயகிகளாக நடித்தவர்கள் அனைவரும் மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
சண்டமாருதத்தையும் லிஸ்டினும், ராதிகா சரத்குமாரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்திலும் ஓவியா, மீராநந்தன் என்று மலையாள நடிகைகளையே ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
சரத்குமாரின் கதைக்கு க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்கம் ஏ.வெங்கடேஷ். இதுவரை ஏ.வெங்கடேஷின் படத்துக்கு பட்டுக்கோட்டை பிரபாகர்தான் வசனம் எழுதி வந்தார். சண்டமாருதத்தில் அது மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜேம்ஸ் வசந்தன் படத்துக்கு இசையமைக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்