சந்தோஷ கண்ணீருடன் இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் பார்த்திபன்

புதன், 20 ஆகஸ்ட் 2014 (16:16 IST)
நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றியை ருசித்திருக்கிறார் பார்த்திபன். வெறும் வெற்றியல்ல, விமர்சகர்களும், ரசிகர்களும் ஒருசேர கொண்டாடும் வெற்றி. ஆனந்தத்தில் கண்ணீர் வருகிறது என்று பார்த்திபன் சொல்லாமலே நம்மால் உணர முடியும்.
இது பற்றி பார்த்திபன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
 
"முதல் படம் புதிய பாதை வெளியானதும் சபரிமலை சென்றுவிட்டேன். எல்லாம் ஆண்டவன் விட்டவழி என்று அவன் மீது பாரத்தை போட்டேன். அதன் பிறகு கதை, கருத்து என்று நான் செய்த படங்கள் வெற்றியை தரவில்லை. என்னுடைய கிப்ட் வித்தியாசமாக இருக்கிறது என்றார்களே தவிர என்னுடைய படத்தைப் பற்றி எதுவும் யாரும் சொல்வதில்லை.
 
அந்த வேகத்தில்தான் கதையே இல்லாமல் ஒரு படம் எடுத்தேன். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு சந்தோஷத்தில் கண்ணீர் வரவழைக்கிறது. அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. அது இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கும். என்ன கதை என்று கேட்காதீங்க. இதுவும் கதையே இல்லாத படம்தான்."
 
ஆக, அடுத்த ஆட்டத்துக்கு பார்த்திபன் தயார். அளவுக்கு மிஞ்சிய அமிர்தமாக இல்லாமலிருக்க வாழ்த்துகள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்