சந்தோஷத்தில் சரபம் நவீன் சந்திரா

சனி, 31 மே 2014 (15:09 IST)
இளம் திறமையாளர்களை உற்சாகப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கிறார் திருக்குமாரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். குறைவான பட்ஜெட், புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட், திறமையான அறிமுக இயக்குனர், யதார்த்தமான நடிகர்கள்... இதுதான் சி.வி.குமாரின் வெற்றி ஃபார்முலா.
 
அட்டகத்தி தொடங்கி தெகிடி வரை அதிகம் அறிமுகமில்லாத நடிகர்களையே தனது படங்களில் நடிக்க வைக்கிறார். சூதுகவ்வும் படத்தில் நண்பர்களில் ஒருவராக நடித்த அசோக் செல்வனை பீட்சா 2 வில் ஹீரோவாக்கினார். அவரின் அடக்கமான நடிப்பு பிடித்துப் போக தெகிடியிலும் ஹீரோவானார் அசோக் செல்வன். அதேபோன்றதொரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது நவீன் சந்திராவுக்கு. 
 
சி.வி.குமார் தயாரித்துள்ள முண்டாசுப்பட்டி விரைவில் வெளியாகிறது. இதுதவிர சரபம் என்ற படத்தை தயாரித்துள்ளார். கன்னட லூசியாவின் தமிழ் ரீமேக் சித்தார்த் நடிப்பில் தயாராகி வருகிறது. நலன் குமாரசாமியும் சி.வி.குமாருக்காக ஒரு படம் இயக்கவுள்ளார்.
 
இதில் சரபம் படத்தில் நடித்தவர் நவீன் சந்திரா. மொத்தம் 30 தினங்களில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளனர். இந்தப் படத்தில் நவீனின் நடிப்பையும் உழைப்பையும் பார்த்தவர் தனது அடுத்தப் படத்திலும் நவீனை ஒப்பந்தம் செய்துள்ளார். அந்தப் படத்தை இயக்கப் போவதும் ஒரு அறிமுக இயக்குனர்தான். வழக்கம்போல குறைவான பட்ஜெட். வழக்கம் போல இதுவும் ஒரு க்ரைம் த்ரில்லர்.
 
முதல் படம் வெளிவரும் முன்பே இரண்டாவது படம் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் நவீன் சந்திரா.

வெப்துனியாவைப் படிக்கவும்