கடந்த சில தினங்களாக எந்திரன்-2 பற்றிய செய்திகள் கோடம்பாக்கத்தில் அலையடிக்கிறது. 2010-ல் வெளியான எந்திரன் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை பொறித்தது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் அட்ராக்ஷனாக அமைந்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் எடுக்கிறார் என்ற பேச்சு நெடுங்காலமாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக பேச்சு வலுப்பட்டிருக்கிறது. கோச்சடையானை எடுத்த ஈராஸ் நிறுவனம் எந்திரன்-2 வை தயாரிக்க ஆர்வம் காட்டுவதாகவும் ஷங்கர், ரஜினிக்கு அதில் உடன்பாடென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எந்திரனைவிட அதிக பொருட்செலவில் தயாரிக்கவும் ஈராஸ் தயார்.