தஞ்சை மணிமண்டபம் அருகே அரசு குழந்தைகள் இல்லமும், அரசு கூர்நோக்கு இல்லமும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடமாகும். கூர்நோக்கு இல்ல வளாகத்தில் நண்பேன்டா படப்பிடிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்தனர். ஆனால் திடீர் மழைக் காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை.
மறுநாள் உதயநிதி, சந்தானம் உள்ளிட்ட படப்பிடிப்புக்குழு கூர்நோக்கு இல்ல வளாகத்துக்கு வந்தனர். ஆனால் அதன் ஊழியர்கள் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என தடை விதித்தனர். முறையான அனுமதி கடிதம் பெறாததால் அவர்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்குழு திரும்பிச் சென்றது.