ஈட்டிக்காக பட்டை தீட்டப்பட்ட அதர்வா

வெள்ளி, 30 மே 2014 (18:21 IST)
ரவி இயக்கும் ஈட்டி படத்தில் ஓட்டப் பந்தய வீரராக நடிக்கிறார் அதர்வா. காலையில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து டவுசரை மாட்டி ஓட்டப் பந்தய வீரராக மாறும் காலம் மலையேறிவிட்டது. ஒட்டப் பந்தய வீரருக்குரிய உடல்வாகும், மேனரிசமும் இல்லையென்றால் இன்றைய ரசிகர்களை திருப்திப்படுத்த இயலாது. அதுவும் அதர்வா பாலாவின் பட்டறையில் பழக்கக் காய்ச்சி பட்டைத் தீட்டப்பட்டவர்.
 
ஈட்டி படத்துக்காக சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகடாமியில் தினமும் காலை ஐந்து மணிமுதல் எட்டு மணிவரை பயிற்சி எடுத்துள்ளார் அதர்வா. மொத்தம் மூன்று மாதங்கள். இவருக்கு பயிற்சி அளித்தவர் ஆசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நாகராஜன். 
 
ஓட்டப் பந்தய வீரர்களை அவர்களின் கால்களைப் பார்த்தே கண்டு பிடிக்கலாம் கெண்டைக்கால் தசையெல்லாம் இறுகி திரண்டுபோய் இருக்கும். மூன்று மாத பயிற்சியில் அதர்வாவின் கால்களும் ஓட்டப் பந்தய வீரரை போல் மாற்றமடைந்துள்ளன. அதேபோல் சிக்ஸ்பேக்கும் இந்தப் படத்துக்காக வைத்துக் கொண்டுள்ளார்.
 
பல நிஜ வீரர்களைவிட அதர்வா சிறப்பாக ஓடுகிறார் என்று நாகராஜன் சான்றிதழ் அளித்த பிறேகே பயிற்சியை நிறுத்தியிருக்கிறார்கள்.
 
அடுத்த மாதம் படத்தின் இரண்டாவது ஷெட்யூல்ட் ஆரம்பமாகிறது. அதில் படத்தின் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொள்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்