இரண்டு நாயகிகளில் ஒருவர் அஞ்சலி - உறுதியாக நிற்கும் சுராஜ்

சனி, 21 ஜூன் 2014 (13:56 IST)
சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அஞ்சலி நடிப்பார் என கூறப்பட்டது.

களஞ்சியம், என்னுடைய படத்தில் அஞ்சலி நடித்த பிறகே வேறு படங்களில் அவர் நடிக்க வேண்டும் என குடைச்சல் கொடுத்து வருவதால் ஜெயம் ரவி படத்தில் அஞ்சலியை நடிக்க வைப்பார்களா என்ற கேள்வி இருந்தது. அதற்கு உறுதியான பதிலை தந்துள்ளார் சுராஜ்.
 
தலைநகரம், மலைக்கோட்டை என்று லாபம் சம்பாதித்து தந்த படங்களின் இயக்குனரான சுராஜ் சமீபமாக அந்த நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார். அதிலும் கடைசியாக அவர் இயக்கிய அலெக்ஸ்பாண்டியன் சுராஜ் மீதான நம்பிக்கையை துடைத்தெறிந்தது. சேர்ந்து படம் செய்யலாம் என்று வாக்கு தந்திருந்த பல நடிகர்களும் சுராஜை கண்டு பதுங்க ஆரம்பித்தனர். அதில் முக்கியமானவர்கள் தனுஷ், கார்த்தி.
 
 

ஒருவழியாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு சுராஜுக்கு கிடைத்துள்ளது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அவருக்கு இரு ஜோ‌டிகள். அதில் ஒருவராக நடிக்க அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
என்னதான் பிரச்சனைகள் அஞ்சலியை சுற்றி இருந்தாலும், அஞ்சலி என்னுடைய படத்தில் நடிப்பது உறுதி என்று தீர்மானமாக கூறியுள்ளார் சுராஜ்.
 
இயக்குனர்கள் சங்கத்தின் பஞ்சாயத்து காரணமாக மு.களஞ்சியத்தின் ஊர்சுற்றிப் புராணத்தில் நடித்துவிட்டு சுராஜ் படத்தில் இணைந்து கொள்வார் அஞ்சலி என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்