நயன்தாரா நடித்துள்ள நீ எங்கே என் அன்பே படம் வெளியாகியுள்ளது. வடிவேலு சொல்லும், ஓபனிங் எல்லாம் நல்லாயிருக்கு, ஆனா பினிஷிங் சரியில்லையே டயலாக் இந்தப் படத்துக்கு பொருந்தும். படத்துக்கு என்றால் படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவும்.
படம் படப்பிடிப்பில் இருக்கையில் நயன்தாராவின் ரசிகர் மன்ற தலைவரைப் போல் நயன்தாராவின் புகழ் பாடுவதுதான் இயக்குனர் சேகர் கம்மூலாவின் வேலையாக இருந்தது. நயன்தாராவின் நடிப்புக்கு முன் வித்யாபாலன் ஒன்றுமேயில்லை, நயன்தாராவைப் போல் ஒரு சின்சியர் நடிகையை பார்க்க முடியாது என்று தினம் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருந்தார்.
வித்யாபாலன் கஹானியில் கர்ப்பிணியாக நடித்தார். ஆனால் நீ எங்கே என் அன்பேயில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கவில்லை. கர்ப்பிணி என்ற சிம்பதியை வைத்து ரசிகர்களின் கருணையை பெற நயன்தாரா விரும்பவில்லை என சேகர் கம்மூலா அதற்கும் விளக்கம் தந்தார். கர்ப்பிணியாக நடிக்க அவர் விரும்பாததால்தான் இயக்குனர் அவரது கதாபாத்திரத்தை மாற்றினார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நான் கர்ப்பிணியாக நடிக்காததற்கு இயக்குனரின் முடிவுதான் காரணம். நான் எந்த வேடத்திலும் நடிக்க தயார், ஸ்ரீராமராஜ்ஜியத்தில் கர்ப்பிணியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்துள்ளேன் என்று சேகர் கம்மூலாவை நாக் அவுட் செய்துள்ளார்.