இனியா வீட்டில் திருட்டு - அக்காவின் காதலனே உடந்தையாகயிருந்தது அம்பலம்

திங்கள், 16 ஜூன் 2014 (11:31 IST)
நடிகை இனியாவின் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் திருடு போனதற்கு இனியாவின் அக்காவின் காதலனே உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இனியாவின் அக்கா சுவாதி. மலையாள தொலக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சுவாதியும், பெயின்ட் கடை ஒன்றில் வேலை செய்யும் ஷாபின் என்பவரும் காதலித்து வந்தனர். ஷாபினின் குடும்பம் இனியாவின் குடும்பம் அளவுக்கு செல்வந்தர்கள் கிடையாது. அதனால் இவர்களின் காதலுக்கு இனியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
 
சுவாதியும், ஷாபினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால் கடந்த 29 -ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். திருவனந்தபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
 
தன்னிடம் பணம் இல்லை என்பது ஷாபினுக்கு தொடர்ந்து உறுத்தலாக இருந்துள்ளது. இந்நிலையில் இனியாவின் வீட்டுச் சாவியைப் போன்று டூப்ளிகேட் சாவி ஒன்றை ஷாபின் தயாரித்துள்ளார். கடந்த 5 -ம் தேதி இனியா, சுவாதி உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் சினிமாவுக்கு சென்றனர். ஷாபினும் அவர்களுடன் சென்றார். அவரது திட்டபடி அவரின் நண்பர்கள் சிலர் டூப்ளிகேட் சாவியின் உதவியுடன் இனியாவின் வீட்டைத் திறந்து 5 லட்ச ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். பத்து சவரன் நகையும் காணாமல் போனதாக முதலில் இனியாவின் வீட்டினர் புகார் தந்தனர். ஆனால் பணம் மட்டுமே திருட்டுப் போனதாக இப்போது தெரிவித்துள்ளனர்.
 
போலீஸ் விசாரணையில் ஷாபின் இந்த திருட்டுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.
 
இதனால் சுவாதி - ஷாபின் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்