ஆதிபகவனுக்கு இந்து கடவுள் பெயரில் சிக்கல்

திங்கள், 28 ஜனவரி 2013 (17:44 IST)
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழிக்கு தமிழ் சினிமா இரையாகிக் கொண்டிருக்கிறது. விஸ்வரூ... ஸ், யப்பா... இந்தப் பெயரைச் சொல்லும் போதே நமக்கு அலுப்பாக இருக்கிறது. இதன் முன்னணி பின்னணி எல்லாம் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதனை விட்டுவிடுவோம்.
FILE

ஒரு மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக்குக்கு விடுமுறை வருவதால் அந்த விடுமுறை கலெக்ஷனையும் சேர்த்து மற்ற நாட்களில் வசூஉலிக்க வேண்டும் என அரசே டார்கெட் பிக்ஸ் பண்ணுகிறது.

எப்படியாவது தமது மக்களை குடிக்க அதுவும் அதிகமாக குடிக்க வைத்தாக வேண்டும் என்ற கொள்கையுடன் அரசு செயல்படும் நாட்டில் ஒரு நடிகை, பெண்கள் குடிக்கலாமா என்று தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அது அவரவரர் விருப்பம் என்று பதிலளித்தால், அந்த பதில் பெண்களை குடிக்கத் தூண்டுவதாகக் கூறி அந்த நடிகை மீது ஒருவர் வழக்கு தொடர்கிறார். இந்த கூத்து வேறெந்த நாட்டிலும் நடக்குமா என்று தெரியவில்லை.

சரி, இப்போது நமது மேட்டருக்கு வருவோம். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர் இன்று கமிஷனரை சந்தித்து அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக மனு ஒன்றை அளித்தனர். என்ன விஷயம்? அமீரின் ஆதிபகவன் படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று அந்த இரு வக்கீல்களும் சந்தேகிக்கிறார்களாம். இந்த சந்தேகம் எப்படி வந்தது?

அமீர் ராம் என்ற படத்தை எடுத்தாராம். அந்தப் படத்தின் நாயகன் ஒரு சைக்கோவாம். ஆதிபகவன் என்பது விநாயகர் மற்றும் சிவபெருமானை குறிப்பதாம். ராமில் நாயகனை சைக்கோவாக காண்பித்ததால் ஆதிபகவன் படத்தில் ஏதாவது இருக்கணும் இல்லையா?

ராம் படத்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது போல் ஆதிபகவானால் ரத்த மழை பொழியக் கூடாதில்லையா. அந்த நல்லெண்ணத்தில் வக்கீல்கள் புகார் தந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்படியொரு அதிஉன்னத சந்தேகம் வந்ததால் ஆதிபகவான் படப்பெயரை மாற்ற வேண்டுமாம். கூடவே படத்தை அவர்களுக்கும், அவர்கள் பரிந்துரைக்கும் இந்து அமைப்புகளுக்கும் திரையிட்டு காட்டி நோ அப்ஜெக்ஷன் வாங்க வேண்டுமாம்.

நாராயணா... இந்த உலகம் இன்னுமா அழியாம இருக்கு?

வெப்துனியாவைப் படிக்கவும்