அக்காவின் திருமணத்தை நிறுத்தவில்லை - இனியா விளக்கம்

புதன், 18 ஜூன் 2014 (11:03 IST)
சமீபத்தில் நடிகை இனியாவின் திருவனந்தபுரம் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் கொள்ளை போனது. அந்தத் திருட்டில் இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஷாபினுக்கு தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதனால் சுவாதி - ஷாபின் திருமணம் நடக்காது என்ற பேச்சு எழுந்தது. அதனை இனியா மறுத்துள்ளார்.
சுவாதி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவரும் ஷாபினும் காதலர்கள். ஷாபின் வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அதனால் சுவாதி, ஷாபின் காதலுக்கு இனியாவின் பெற்றேnர் எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும், இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் கடந்த 29 -ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்தினர் என்றும் மலையாள பத்திரிகைகள் எழுதின. 
 
இனியாவின் வீட்டுச் சாவி போல் டூப்ளிகேட் சாவி தயாரித்துள்ளார் ஷாபின். கடந்த 5 -ம் தேதி இனியா மற்றும் அவரது குடும்பத்தினருடன் சினிமாவுக்கு ஷாபின் சென்றுள்ளார். அதேநேரம் தன் கைவசம் இருந்த கள்ளச் சாவியை தனது நண்பர்களிடம் தந்துள்ளார். அவர்கள் இனியாவின் வீட்டினர் சினிமாவுக்கு சென்றிருந்தவேளை வீட்டைத் திறந்து ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர். இந்த விவரங்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
 
சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே கொள்ளை சம்பவத்துக்கு உடந்தை என்பதால் அவர்கள் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பேட்டி தந்துள்ளார் இனியா.
 
நான் என்னுடைய சகோதரியுடன் எதுவும் பேசவில்லை. அவளுக்கு இப்போது தனிமை அவசியம். ஷாபின் தனது குடும்ப வியாபாரத்தை கவனித்து வருகிறார். அவர்கள் குடும்பம் எங்களைவிட செல்வந்தர்கள். திருமணத்தை நிறுத்துவதாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
 
மலையாள பத்திரிகைகள் ஷாபின் உறவுக்காரரின் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்ததாக குறிப்பிட்டிருந்தன. அதையும் இனியா தனது பேட்டியில் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்