முடியாது என்ற அனன்யா, மூச்சை அடக்கி நடித்த வில்லன்

வியாழன், 26 ஜூன் 2014 (11:56 IST)
எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அதனை பிறர்மீது விட மாட்டேன் என்ற ஞானக்கூத்தனின் கவிதை வரிகள் இலக்கிய உலகில் சர்ச்சையை உருவாக்கியது. அதிதி படத்திலும் இந்த மூச்சுக் காற்றுதான் பிரச்சனையை உருவாக்கியதாம்.
அது என்ன என்று பார்ப்பதற்கு முன் இந்த அதிதியின் நதி மூலம் ரிஷி மூலத்தைப் பார்க்கலாம். 
 
கனடா - ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பில் வெளியான படம் பட்டர்ஃபிளை ஆன் ஏ வீல் (Butterfly on a Wheel). பியர்ஸ் பிராஸ்னன், ஹெரார்ட் பட்லர், மரிய பெல்லோ நடித்த இந்தப் படத்தை மலையாளத்தில் காக்டெய்ல் என்ற பெயரில் காப்பியடித்தனர். ஜெயசூர்யா, அனூப் மேனன் நடித்த அந்த காப்பியின் ரைட்ஸை முறைப்படி வாங்கி தமிழில் எடுத்திருக்கும் படம்தான் அதிதி. விஜய்யை வைத்து அழகியதமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் அதிதியை இயக்கியுள்ளார்.
 
நந்தா, அனன்யா நடித்துள்ள இந்தப் படத்தின் ஒருகாட்சியில் அனன்யாவை புதுமுக வில்லன் நிகேஷ்ராம் இறுக்கமாக அணைத்து அவரது முடியை முகர வேண்டும். இந்தக் காட்சியில் நடிக்க முதலில் அனன்யா மறுத்துள்ளார். காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய பிறகு, நிகேஷ்ராமின் மூச்சுக் காற்று என்மீது படக்கூடாது என்ற நிபந்தனையுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது நிகேஷ்ராமை காயப்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்ட காட்சியில் நடிக்க தயங்கியதாக தெரிகிறது. 
 
பிறகு ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளனர். அவரும் மூச்சை அடக்கியபடி நடித்து காட்சியை ஓகே செய்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்