ஜேப்பி அழக‌ரின் வானம் பார்த்த சீமையிலே

புதன், 11 நவம்பர் 2009 (17:06 IST)
பிரமிட் சாய்மீரா நிதி உதவி செய்ய பத்துப் படங்கள் முன்பு தொடங்கப்பட்டது. அதில் கரை சேர்ந்தவை ஒருசிலதான். அவற்றில் முக்கியமானது வானம் பார்த்த சீமையிலே. பிரமிட் சாய்மீராவுக்காக தெய்வானை மூவிஸ் அமுததுரைரா‌ஜ், கே.சி.என்.சந்திரசேகர் இணைந்து தயா‌ரித்துள்ளனர்.

தமிழகத்தின் வானம் பார்த்த பூமி என்றால் அது இராமநாதபுரம் மாவட்டம்தான். பசுமையே இல்லாத வறட்சி‌‌ப் பகுதி. படத்தின் பெயருக்கு ஏற்ப இந்த மாவட்டத்தில்தான் மொத்த படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள்.

“பாடல் காட்சிக்கு பொதுவாக இயற்கை எழில் நிறைந்த பகுதிகளுக்கு செல்வார்கள். நாங்கள் இதே வறட்சியான இடங்களில்தான் பாடல்களையும் படமாக்கினோம்” என்றார் ஜேப்பி அழகர்.

வீம்பும், வீராப்பும் கொண்ட கதை நாயகனாக அசோக் குமார் நடித்திருக்கிறார். ஹீரோயின் வெயில் ப்‌ரியங்கா. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பழனிபாரதி, நந்தலாலாவுடன் ஜேப்பி அழகரும் பாடல்கள் எழுதியிருக்கிறார். அடுத்து என்ன நடிப்பா?

படத்துக்காக கருப்பண்ணாசாமி சிலையொன்றை செய்திருக்கிறார்கள். வைதீக முறைப்படி செய்த சிலை என்பதால் உள்ளூர் மக்கள் இந்த கருப்பண்ணாசாமிக்கு பூஜை, படையல் என்று அசத்துகிறார்களாம். விரைவில் வானம் பார்த்த சீமையிலே திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்