விக்ரமுக்கு நோ; மாதவனுக்கு ஓகே- காரணம் கூறும் சாய் பல்லவி

திங்கள், 6 பிப்ரவரி 2017 (13:24 IST)
ஒரே படத்தில் உச்சத்துக்குப் போகிறவர்கள் ஒருசிலர்தான். பிரேமம் என்ற ஒரே படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மும்மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. அழகின் எதிரியாக கருதப்படும் முகப்பருக்களை அழகின் அம்சமாக மாற்றிய நடிகை.



எப்படி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?

உடல் எடை அதிகரிக்கும் போது அதை கட்டுப்படுத்த  யோகா செய்கிறேன். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினமும் தியானமும் செய்வேன்.

உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லையா?

நான் சுத்த சைவம். கடந்த 3 ஆண்டுகளில் எனக்கு காய்ச்சல் வந்ததே இல்லை. தியானம்தான் இதற்கு காரணம்.

ஒரே படத்தில் உச்சத்துக்கு போய்விட்டீர்கள். ஆனால், அதன் பிறகு நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லையே?

துல்கர் சல்மானுடன் களி மலையாளப் படத்தில் நடித்தேன். ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்ததால் படங்களில் நடிக்கவில்லை.

இனி தொடர்ச்சியாக படங்களில் உங்களை எதிர்பார்க்கலாமா?

தமிழில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். விஜய் இயக்குகிறார். மாதவன் ஹீரோவாக நடிக்கும் படம்.

விக்ரம் படத்திலிருந்து விலகியது ஏன்?

கால்ஷீட் பிரச்சனையால்தான் விலக வேண்டி வந்தது. மாதவன் படத்துக்கும், விக்ரம் படத்துக்கும் ஒரே தேதிகளில் கால்ஷட் கேட்டார்கள். அதனால்தான் இப்படியொரு முடிவு எடுக்க வேண்டியதாயிற்று.

மாதவன் படத்தை தேர்வு செய்ய என்ன காரணம்?

மலையாளத்தில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கைதான் விஜய் இயக்குகிறார். சார்லி எனக்கு ரொம்பவும் பிடித்த படம். அதில் பார்வதியின் கேரக்டரும், நடிப்பும் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்களே?

மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். நான் மிகவும் விரும்பப்படும் நடிகையா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை தேர்வு செய்த ரசிகர்கள் இனிமையானவர்கள்.

பிரேமம் படத்தில் நடித்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரேமம் படத்தில் நான் நடித்தேன். ஆனால், அதுவரை என்னால் நடிக்க முடியும் என்பது எனக்குகூட தெரியாது. இப்போதும் அதை  நம்ப முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்