திரைப்படமாகும் பொன்னியின் செல்வன் - தயாரிப்பாளருடன் ஓர் உரையாடல்

வியாழன், 11 டிசம்பர் 2014 (09:22 IST)
வரலாற்று நாவல்களில் கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு நட்சத்திரத் தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படைப்பு இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறார்கள். இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா. அவருடனான உரையாடல்.
 
இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை படமாக்கக் காரணம் என்னட?
 
பொன்னியின் செல்வனுக்கு அவ்வளவு வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு அந்நாவல் பிடிக்கும். 2500 பக்கங்கள் கொண்டது என்றாலும் நானே ஐந்து முறை படித்துள்ளேன் அவ்வளவு அற்புதமான படைப்பு அது. எனவே அதை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு புகழ் பெற்ற அந்தப் படைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிதான் பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படம்.
 
இன்றைய வணிகமய, உலகமயச் சூழலில் வரலாற்றுப் படைப்புகள் ரசிக்கப் படுமா?
 
சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள். இன்று தமிழ் இளைஞர்கள் தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை, வரலாற்றை மரபை, பாரம்பரியத்தை  எல்லாம் அறியாமல் இருக்கிறார்கள். இதை அப்படியே விட்டால் எல்லாம் மறக்கப்பட்டு விடும். தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் சோழர்கள் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம். சோழமன்னர்களில் அனைத்து வகையிலும் தன்னிகரற்று விளங்கிய மன்னன் இராஜாராஜசோழன். அவன் அரியணை ஏறிய வரலாற்றை அழகுடன் வரலாற்று உண்மைகளுடன் கல்கியால் புனையப்பட்ட காவியம்தான் பொன்னியின் செல்வன்.
 
தொழில்நுட்பத்தில் இதை எப்படி செழுமை செய்வீர்கள்?
 
சாதாரண திரைப்படமாக எடுக்கும் போது செலவு, பலவிதமான கேரக்டர்கள் உள்பட பல தடைகள் குறுக்கே நிற்கும். அனிமேஷனாக உருவாக்கும் போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சிறப்பாக காட்டி செழுமை சேர்க்க முடியும். படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர்.

உருவங்கள், பாத்திரங்கள், குணச்சித்திரங்கள் உருவாக்குவதில் தனக்கென தனிப்பெயர் பெற்றிருப்பவர்.  அவர்தான் இதை அனிமேஷன் வடிவத்தில் இயக்குகிறார். இம்முயற்சியில் திரைப்பட ஊடக நண்பர்களும் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களின் பக்கபலம் திரைவடிவ முயற்சிக்கு பெரிதும் துணை நிற்கும்..
 
என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும்?
 
நாவல் வடிவத்தை திரைப்பட வடிவம், அதுவும் 2 டி அனிமேஷன் திரைப்பட வடிவமாக மாற்றுவதே பெரிய சவால். கதை படிக்காதவர்களையும் படம் பார்க்கும்படி சுவாரஸ்யப் படுத்துவது அடுத்த பெரிய சவால்தான். அனிமேஷன்துறை வல்லுநர் குழு இருப்பதால் இதை எங்களால் எதிர்கொள்ள முடியும். கல்கியே ஓர் இயக்குநர். அவரே ஒரு கலை இயக்குநர். அவரே ஒரு வசன கர்த்தா.

அவரே ஒரு திரைக்கதையாசிரியர், காட்சிப் படுத்துபவர் என்பதை அந்தக் கதை படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். எனவே எங்களது பல வேலைகளை அவரே செய்து விட்டார். வடிவ மாற்றம் ஒன்றே பெரிய வேலை. படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை - தமிழ் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம். 

வெப்துனியாவைப் படிக்கவும்