ரோட்டோரம் படுத்திருக்கிறவங்களோட தாம்பத்திய வாழ்க்கை வெட்கப்பட்டா நடக்குமா? - 'வந்தா மல' ப்ரியங்கா பேட்டி

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (19:46 IST)
அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என  வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா.
 

 

வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் மிரட்டியுள்ளார்.
 
பொதுவாக நடிகைகளிடம் கேள்வி கேட்கும் போது, நிறைய யோசித்து பதில் சொல்வார்கள் அல்லது இது வேண்டாமே.. இது பர்சனல்.. என்று மழுப்புவார்கள்..
 
ஆனால் ப்ரியங்கா நாம எப்ப கேள்வியை முடிப்போம் பதிலை தருவோம் என வியக்கவைக்கிறார்...
 
நீங்க தமிழ் நல்லா பேசறீங்களே?
 
ஆமா. பாண்டிச்சேரி தான் என் சொந்த ஊர்..
 
தமிழ் சினிமால கேரளாவை சேர்ந்தவர்களும் மும்பை பொண்ணுங்களும்தானே நடிக்கறாங்க .... நீங்க எப்படி?
 
அப்படி இல்லை.. நல்லா தமிழ் பேசி நடிக்கிற பொண்ணுங்க வேணும்னு தான்  நிறைய டைரக்டர் விரும்பறாங்க. அப்படி கிடைக்லைன்னுதான் வேற மாநிலத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை அவங்களுக்கு.. ஆனால் இப்ப அப்படி இல்லை. நிறைய தமிழ் பொண்ணுங்க சினிமாவுல நடிக்கிறாங்க.
 
அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா  நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா?
 
அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது. ஆனா எனக்குன்னு  ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும். அதை நான் கண்டிப்பா பிடிப்பேன்.
 
வந்தா மல படத்தில அடிக்கடி முத்தத்தை பற்றியே பேசறீங்க.. நிஜ வாழ்கையில் யார் கிட்டயாச்சும் முத்தம் வாங்க ஆசை இருக்கா?
 
இருக்கு.. என் வருங்கால கணவரிடம்.
 
உங்க திருமணம் காதல் திருமணமா இருக்குமா?
 
கண்டிப்பா இல்ல. அதை செய்யத்தான் எனக்கு என் பெற்றோர் இருக்காங்க.. எனக்கு என்ன செய்தா நான் நல்லா இருப்பேன்னு அவங்களுக்கு தெரியும்.. எனவே, எனக்கு திருமணம் நிச்சயம் அம்மா அப்பா பார்க்கிற பையன் தான்.
 
கதைக்கு தேவைன்னா கிளாமரா நடிக்க சொன்னா நடிப்பீங்களா?
 
சேலை, சுடிதார்லையே என்ன பார்ததால இப்படி கேட்கறீங்கன்னு நினைக்கிறன்.. கண்டிப்பா மாடர்ன் பொண்ணா நடிப்பேன். வந்த மல படத்துல சைபர் ஆகலாம்னு  ஒரு பாட்டு வருது. அதை பார்த்தீங்கன்னா இப்படி கேட்க மாட்டீங்க.
 
தமிழ் பொண்ணுங்க கிளாமருக்கு மறுக்கிறதாலத்தான் இயக்குநர்கள் கேரளா மும்பை பக்கம் போறாங்க என்பது சரியா?
 
எல்லா படங்களுமே நீச்சலுடையில ஹீரோயின் கேட்கிறதில்லை. ஹோம்லியா உள்ள படங்களுக்கு ஏன் மும்பைக்கும் கேரளாவுக்கும் போகணும்? தமிழ்ப்பொண்ணுங்களை நடிக்க வைக்கலாமே? அப்போ நிறைய தமிழ்ப்பெண்கள் நடிக்க முன் வருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு நான் முன்னுதாரணமா இருக்க விரும்புறேன்.
 
வந்தா மலயில் ஆபாசமா வசனங்கள் பேசி நடிச்சிருக்கீங்களே? 
 
படத்துல சேரியில வாழுற சென்னை பொண்ணு நான். ரொம்ப போல்டான கேரக்டர். அங்க உள்ள பெண்கள் ஆண்களுக்கு சமம். அவங்களே ஆம்பள மாதிரி எல்லா வேலையும் செய்வாங்க. காதலைக்கூட மென்மையா சொல்லத் தெரியாது. ரோட்டோரம் படுத்திருக்கிறவங்களோட தாம்பத்திய வாழ்க்கை வெட்கப்பட்டா நடக்குமா? அப்படித்தான் வசந்தாவும். அவளுக்கு எதையும் ஒளிச்சிப் பேசத் தெரியாது. அதனால அந்த வசந்தா பேசுனது ரொம்பக் கம்மிதான்.  
 
இந்த படத்துல சென்னை தமிழ் பேசி நடிச்சிருக்கீங்களே .. எவ்ளோ நாள் பயிற்சி எடுத்தீங்க..?
 
அதெல்லாம் இல்ல. இப்படித்தான் பேசணும்னு இகோர் சார் சொன்னதை  செய்தேன்.. அவ்வளவுதான்.
 
நடிக்கும் படங்கள் பற்றி...?
 
ரீங்காரம், திருப்பதி லட்டு, சாரல்னு மூணு படம் பண்றேன்.  திருப்பதி லட்டு படத்துல சுரேஷ் காமாட்சி சார் இயக்கத்துல விஜய் வசந்த்கூட ஜோடியா பண்றேன். முழுக்க முழுக்க காமடிப் படம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்