ரஜினி மட்டும்தான் பிடிக்கும் - அறிமுக நடிகை நைனா சர்வார் பேட்டி
செவ்வாய், 5 ஜூலை 2016 (18:21 IST)
அட்ரா மச்சான் விசிலு படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நைனா சர்வார். படம் வரும் 7 -ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், நைனா சர்வார் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அறிமுக நடிகைக்கேயுரிய துடிப்பு தெரிகிறது நைனா சர்வாரின் பேச்சில்.
உங்களைப் பற்றி சொல்லுங்க?
என் சொந்த ஊர் பெங்களூர். பி.காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே கன்னடத்தில் நான்கு படங்கள் முடித்துவிட்டேன். அட்ரா மச்சான் விசிலு எனக்கு முதல் தமிழ்ப் படம்.
வேறு படங்கள் எதுவும் கமிட்டாகவில்லையா?
இன்னொரு தமிழப் படத்திலும் நடித்து வருகிறேன். பெயர் கொளஞ்சி.
உங்கள் கன்னட படத்தைப் பார்த்து அட்ரா மச்சான் விசிலு வாய்ப்பு கிடைத்ததா?
இந்த பட இயக்குநர் இதற்கு முன் நான் நடித்த படங்களைப் பார்த்தாரா என்று தெரியவில்லை. இந்த படத்துக்காக என்னை அணுகி கதை சொன்னார் இயக்குநர். கதை கேட்டபோது என் பாத்திரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான ஒரு ரோல். ரொம்பப் பிடித்திருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்தின் கதை முதலிலேயே தெரியுமா?
முழுசாக நடித்து முடித்த பிறகுதான் எனக்கு இந்த கதை எதைப் பற்றியது என்பது புரிந்தது. ஆனால் எனக்கு என் பாத்திரம் திருப்தியாக இருந்தது. அது போதும்.
தமிழ் தெரியுமா?
னக்கு தமிழை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம்.
எப்படி சமாளித்தீர்கள்?
செட்டில் எல்லோருடனும் பேச சிவாதான் உதவினார். நானும் இயக்குநரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம்.
பவர் ஸ்டார் சீனிவாசன் பற்றி என்ன நினைக்கிறீங்க?
பவர் ஸ்டார் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் எனக்கும் சேர்ந்த மாதிரி சீன்கள் இல்லை. அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன்.
ஜோடியாக...?
ஜோடியாகவும்தான்... இதில் தயக்கம் ஏதுமில்லை.
அடுத்து என்ன படங்கள்?
அட்ரா மச்சான் விசிலு பாடல் புரமோஷன் பார்த்து விட்டு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதையும் ஏற்கவில்லை. மனசுக்குப் பிடிச்ச மாதிரி பாத்திரங்கள் அமைந்தால் நானே என் அடுத்த படத்தை அறிவிப்பேன்.
பிடித்த நடிகை?
நயன்தாரா.
பிடித்த நடிகர்?
எவர்கிரீன் ஒன் அண்ட் ஒன்லி ரஜினி சார்தான்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்