கடம்பனுக்காக ஆர்யா ரொம்பவே மெனக்கெட்டார் - கடம்பன் இயக்குனர் ராகவன் பேட்டி

சனி, 11 பிப்ரவரி 2017 (11:06 IST)
மஞ்சப்பை குறைந்த பட்ஜெட்டில் நிறைவான லாபத்தை தந்த படம். திருப்பதி பிரதர்ஸுக்கு மஞ்சப்பை 10 கோடிகளுக்கு மேல்  லாபத்தை சம்பாதித்து தந்தது. அதன் இயக்குனர் ராகவனின் இரண்டாவது படம் கடம்பன். முதல் படத்துக்கு முற்றிலும் வித்தியாசமாக பழங்குடியினரை மையப்படுத்திய படம். படம் குறித்து ராகவன் சொன்னவை...
 

 
கடம்பன் படம் குறித்து சொல்லுங்க...?
 
கடம்பன் பழங்குடியினரின் வாழ்க்கைப் பிரச்சனையை மையப்படுத்தி தயாராகியிருக்கு. இது முழுக்க பழங்குடியினர்  பிரச்சனையை பற்றி மட்டுமே பேசுகிற படம்.
 
நிறைய யானைகளை நடிக்க வைத்திருக்கிறீர்களே?
 
மொத்தம் 70 யானைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளன.
 
யானைகள் அதிகம் நடித்துள்ளதால், இது யானைகளை பற்றிய படம் என்ற எண்ணம் உள்ளதே?
 
70 யானைகள் படத்தில் இருந்தாலும் இது யானைகள் குறித்த படம் கிடையாது. ஏற்கனவே சொன்னது போல் முழுக்க  பழங்குடியினர் பிரச்சனையை பற்றி பேசுகிற படம்.
 
பிறகு ஏன் யானைகள்?
 
இந்த கதைக்குள் ஏன் யானைகள் வந்தது என்று கேட்டால், பழங்குடி மக்களுக்கும், காட்டு விலங்குகளுக்குமிடையே ஒரு உறவு  இருக்கிறது. பழங்குடி மக்களை மிருகங்கள் எதிரிகளாக நினைப்பதில்லை. அதை சித்தரிப்பதற்காகத்தான் யானைகள் இந்தப்  படத்தில் நடிக்க வைக்கப்பட்டன.
 
வெளிநாட்டில் அதிக காட்சிகளை படமாக்கியிருக்கிறீர்களே?
 
ஆமாம். பாங்காங்கின் அடர்ந்த அழகிய காட்டுப் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினோம்.
 
படத்தில் நடித்திருப்பவர்கள்...?
 
ஆர்யா நாயகன். இந்தப் படத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். நாயகி கேதரின் தெரேசா. ஒய்.ஜி.மகேந்திரன், சூப்பர்  சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ் என ஒவ்வொருவருமே கதாபாத்திரம் புரிந்து நடித்துள்ளனர்.
 
படம் என்ன நிலையில் உள்ளது?
 
படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
 
பட வெளியீடு எப்போது?
 
ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்