திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் - சமந்தா பேட்டி

திங்கள், 12 செப்டம்பர் 2016 (16:59 IST)
நாக சைதன்யா - சமந்தா திருமணம் விரைவில் நடைபெறும் என்று நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு கணவர் குடும்பத்தின் கௌரவம் பாதிக்காத படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கம்...

 
திருமணம் எப்போது?
 
ஒருவரை காதலிக்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். திருமண தேதி முடிவானதும் நானே அறிவிப்பேன்.
 
திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவீர்களா?
 
நிறைய படங்களில் நடித்ததால் இப்போது ஓய்வு தேவைப்பட்டது. அதனால் நடிப்பதை கொஞ்சம் குறைத்திருக்கிறேன். அந்த நேரத்திலும் சமையல் கற்பதில்தான் பொழுதை செலவளித்தேன். 
 
கேள்விக்கு பதில் சொல்லவில்லை... திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?
 
திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விட்டு விலகமாட்டேன். நான் வாழப்போகிற குடும்பத்தின் கௌரவம் பாதிக்காத வகையில், கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
 
சினிமாவில் எதிர்கால திட்டம்?
 
சினிமாவில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒருவரின் தலையெழுத்து மாறுகிறது. பணம், புகழ் எதுவும் இங்கு நிலைக்காது. எனவே எந்த எதிர்கால திட்டமும் எனக்கு இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருக்கிறது.
 
பிரதியூஷாவை ஆரம்பிக்க என்ன காரணம்?
 
உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹாஸ்பிடலில் இருந்த போது வாழ்க்கையை குறித்து தீவிரமாக யோசித்தேன். குழந்தைகளுக்கு உதவ பிரதியூஷா என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இரண்டு பஸ்களில் மாறித்தான் கல்லூரிக்கு போவேன். வருமானம் இல்லாத அந்த காலத்தில் கூட எனது அம்மா கொஞ்சம் பணத்தை ஒதுக்கி ஏழைகளுக்கு சின்ன உதவிகள் செய்வார். இப்போது என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. எனவே அதன்மூலம் மக்களுக்கு உதவுகிறேன்.
 
நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கிறதா?
 
எல்லா நடிகைகளுக்கும் முன்னணி கதாநாயகர்களுடனும், பெரிய இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு இந்த இரண்டுமே நடந்து இருக்கிறது. எனவே நிறைவேறாத ஆசை எதுவும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்