நயன்தாரா அழகாக இருந்தார் - ஸ்ரீதிவ்யா பேட்டி

ஞாயிறு, 9 அக்டோபர் 2016 (13:49 IST)
காஷ்மோரா படத்தில் நயன்தாராவுடன் நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா. நயன்தாரா இருக்கும் படத்தில் பிற நடிகைகள் நடிக்க தயக்கம் காட்டுவது உண்டு. நயன்தாரா அளவுக்கு தங்களுக்கு முக்கியத்துவம் இருக்காதோ என்று. ஸ்ரீதிவ்யாவிடமும் அதே கேள்வி முன் வைக்கப்பட்டது.

 
நயன்தாராவுடன் நடித்திருக்கிறீர்களோ...?
 
காஷ்மோரா படத்தின் கதையை டைரக்டர் கோகுல் என்னிடம் சொன்னபோது நயன்தாரா கவுரவ வேடத்தில்தான் வருகிறார் என்றார். அதனால் எனக்கு அவரைப் பார்த்து பயம் ஏற்படவில்லை. அவருக்கு அதிக காட்சிகள் இருக்குமோ என்று மிரளவும் இல்லை.
 
என்ன காரணத்துக்காக காஷ்மோராவில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்?
 
எனது கதாபாத்திரம் எனக்கு திருப்தியாக தோன்றியது. வித்தியாசமாகவும் இருந்தது. 
 
உங்கள் இருவரில் யார் கார்த்தியின் காதலியாக வருகிறீர்கள்?
 
இந்தப் படத்தில் காதல் கிடையாது. இதற்கு மேல் படத்தின் கதை பற்றி கூற முடியாது.
 
நயன்தாராவும், நீங்களும் எத்தனை நாள் இணைந்து நடித்தீர்கள்...?
 
நானும் நயன்தாராவும் ஒரே நாள்தான் இணைந்து நடித்தோம்.
 
நயன்தாராவுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது?
 
முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது என்னிடம் நன்றாகவே பேசினார். அவர் அழகாக இருந்தார்.
 
உங்களுக்கு என்ன மாதிரி வேடம்? அதே பாவாடை தாவணிதானா?
 
இதுவரை பல படங்களில் பாவாடை தாவணியில் நடித்து விட்டேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது என்று சொன்னார்கள். இந்த படத்தில் மாடர்ன் கேர்ள் ஆக வருகிறேன். 
 
நீங்கள் அதிக சம்பளம் கேட்பதாக குற்றச்சாட்டு உள்ளதே?
 
அதிக சம்பளம் கேட்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறு. அப்படி யாரிடமும் கேட்கவில்லை. என்னுடைய தகுதிக்கான சம்பளமே வாங்குகிறேன்.
 
யாருடன் நடிக்க ஆசை?
 
நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். 
 
எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க ஆசை?
 
நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் தோன்ற விரும்புகிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்