என்னுடையது காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் - ப்ரியாமணி பேட்டி
திங்கள், 27 ஏப்ரல் 2015 (10:52 IST)
தமிழ்ப் படங்களில் ப்ரியாமணியை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர் திருச்சி வந்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டி உங்களுக்காக.
தமிழில் உங்களை பார்க்க முடியவில்லையே?
நான் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இன்னும் ஓரிரு நாளில் அந்த படப்பிடிப்பு முடிந்துவிடும். அடுத்த ஜூன் மாதம் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். தமிழ் படத்தில் நடிக்க எனக்கு இதுவரை வாய்ப்பு வரவில்லை. வாய்ப்பு வந்ததும் தமிழ் படத்தில் நடிப்பேன்.
ஒரேயொரு பருத்தி வீரன் போதுமென்று நினைத்துவிட்டீர்களா?
பருத்தி வீரன் படத்தில் உள்ள கதையம்சம் போல எந்த படமும் இதுவரை வரவில்லை.
என்ன மாதிரியான வேடத்தில் நடிக்க ஆசை?
வில்லி காதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அதிக ஆசையாக உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் எனக்கு விருப்பம்தான்.
சின்ன பட்ஜெட் படங்கள் என்று தமிழை ஒதுக்குகிறீர்கள் என கூறப்படுகிறதே?
குறைந்த பட்ஜெட் படத்தில் நடிக்க என்னை எந்த இயக்குனரும் அணுகவில்லை. தமிழ் படத்தில் நான் நடிக்க முடியாமல் நீண்ட இடைவெளி வர இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்தான் காரணம்.
திருமணம் எப்போது?
எனக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. எனது திருமணம் காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். மாப்பிள்ளை சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இந்தியரா வெளிநாட்டை சேர்ந்தவரா என்பதை இப்போது கூற முடியாது. எனது திருமணத்தை முறைப்படி தெரிவிப்பேன்.
சமீபமாக ரகசிய கேரா பொருத்தி, நடிகைகளை ஆபாசமாக படமெடுத்து வெளியிடும் போக்கு அதிகரித்துள்ளதே?
ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் மட்டுமல்ல எந்த பெண்களையும் படம் எடுத்து வெளியிடுவது தவறான செயல். அதில் அவர்களுக்கு என்னதான் மகிழ்ச்சி கிடைக்க போகிறதோ தெரியவில்லை. அவர்கள் அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்து பார்த்தது உண்டா? எனக்கு அதுபோன்ற சம்பவம் இதுவரை நடைபெறவில்லை. யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது.