புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன் - நடிகர் சுரேஷ்

வியாழன், 12 நவம்பர் 2009 (18:24 IST)
எண்பதுகளில் ரொமா‌ண்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உலா வந்தவர் சுரேஷ். நதியா அளவுக்கு இந்த நடிகருக்கும் புகழ் இருந்தது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்தமுறை வில்லனாக.

FILE
சிவா‌ஜி பிலிம்ஸ் தயா‌ரிக்கும் அசல் படத்தில் இந்த முன்னாள் ரொமா‌ண்டிக் ஹீரோதான் வில்லன். இந்தப் படத்தில் நடிப்பது அவருக்கே புது அனுபவமாம். “சரண் அருமையான யங் டைரக்டர். சிவா‌ஜி பிலிம்ஸ் பெ‌ரிய பேனர். எல்லாவற்றையும் விட அ‌ஜித் சார் காம்பினேஷன். புது டீமில் வொர்க் பண்ணுவது என்னை நானே புதுப்பித்துக் கொள்வதற்கு சமம்.”

அசலுக்கு முன் சுரேஷ் நடித்த படம் கிழக்கு கடற்கரை சாலை. இதிலும் ஏறக்குறைய வில்லன் ரோல்தான். இனி வில்லனாகதான் தொடர்ந்து நடிப்பாரா? “வில்லன்னு பிக்ஸ் ஆகலை. நல்ல கேரக்டர்கள் அனைத்தையும் பண்ண தயாராக இருக்கேன். வெரைட்டிதான் இனி முக்கியம்.”

சுரேஷின் தந்தை கோபிநாத் பிரபல இயக்குனர். ராமன் பரசுராமன் போன்ற படங்களை இயக்கியவர். தனது சினிமா ஆர்வத்துக்கு இதுவே காரணம் என்கிறார் சுரேஷ். “அப்பா டைரக்டராக இருந்ததால் சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம் வந்திடுச்சி. ஆனா, என்ன செய்றதுங்கிற தெ‌ளிவு அப்போது இல்லை. கொஞ்ச காலம் எடிட்டிங் அசிஸ்டெண்டா வேலை பார்த்தேன். அப்புறம் டான்ஸ் அசிஸ்டெண்ட். அந்த நேரத்தில் அப்பாவோட நண்பரான போட்டோகிராஃபர் ஒருத்தர் ஹீரோ மாதி‌ி இருக்கியேன்னு சொன்னதோடு என்னை விதவிதமா போட்டோ எடுத்தார். எனக்கு ஹீரோவாகணுங்கிற ஆசை அதுக்கு அப்புறம்தான் ஏற்பட்டுச்சி.”

சுரேஷை அறிந்தவர்களுக்கும் தெ‌ரியாத ஆச்ச‌ரிய செய்தி, பாரதிராஜா தனது அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு முதலில் தேர்வு செய்தவர் சுரேஷ். அவர் மறுத்ததால்தான் அந்த வாய்ப்பு கார்த்திக்குக்கு போனது. பாரதிராஜா படத்தில் சுரேஷ் நடிக்காததற்கான காரணம் சுவாரஸியமானது.

“நான் பல கம்பெனிகளில் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். இயக்குனர்கள் பாரதி-வாசு என்னை அவர்களுடைய படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் இன்னொரு ஆச்ச‌ரியமாக பாரதிராஜாவும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் என்னை ஹீரோவாக செலக்ட் செய்தார்.

யாருடைய படத்தில் நடிப்பது என்று குழப்பம். அப்பாவிடம் கேட்டதற்கு, யார் உன்னை முதலில் ஹீரோவாக செலக்ட் செய்தார்களோ அவர்களுடைய படத்தில் நடி என்றார். உடனே பாரதிராஜாவிடம் பாரதி-வாசு தங்களுடைய படத்தில் என்னை ஹீரோவாக செலக்ட் செய்ததை சொன்னேன். அவரும் பெருந்தன்மையோடு என்னை நடிக்கும்படி வாழ்த்தி அனுப்பினார். அந்தப் படம்தான் பன்னீர் புஷ்பங்கள்.”

தமிழில் பிஸியாக இருக்கும்போதே தெலுங்குக்கு சென்ற சுரேஷ் அங்கு பல படங்களில் நடித்தார். தமிழை மறந்து போகும் அளவுக்கு என்றும் சொல்லலாம். இதில் பலருக்கும் வருத்தம். “தொண்ணூறுகள் வரை லவ்வர் பாயாகவே படங்களில் நடித்தேன். ஒரு கட்டத்தில் அது போரடிக்க ஆரம்பித்தது. 13 படங்களை வேண்டாம் என்று தவிர்த்தேன். அப்போதுதான் தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். நான் எதிர்பார்த்தபடி வெரைட்டியான கேரக்டர்கள் அங்கு கிடைத்தன.”

ஹீரோவாக கொடிகட்டிப் பறந்தவர் திடீரென திரையுலகிலிருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சி, ஆச்ச‌ரியம். “உண்மையில் சினிமாவைவிட்டு நான் போகவில்லை. நான்கு படங்களை தயா‌ரித்தேன். ஆறு தொலைக்காட்சி தொடர்களையும் தயா‌ரித்தேன்.”

அசலுடன் தனது இரண்டாவது ரவுண்ட் தொடங்கியிருப்பதாக தெ‌ரிவிக்கிறார் சுரேஷ். மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பது அவருக்கு புத்துணர்வு அளித்திருக்கிறது. “அசலில் நடிக்க ஆரம்பித்த பிறகு புதிதாக பிறந்ததுபோல் உணர்கிறேன். இனி என் வெற்றிப் பயணம் தொடரும்” உற்சாகமாக சொல்கிறார் சுரேஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்