”தமிழினம் தம்மை விழுங்கிவிடும் என்று சிங்கள இனம் பயப்படுகிறது” - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சனி, 23 மே 2015 (19:08 IST)
தமிழினம் மிகச்சிறிய இனமான தம்மை விழுங்கிவிடும் என்று சிங்கள இனம் பயப்படுகிறது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கூறிய அவர், “நாம் சுய ஆட்சி கோரி போராடி வருவதால் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மத்தியில் பயம் உண்டு. இந்த பயத்தை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தவில்லை. ஆரம்ப காலம் தொட்டே சிங்கள மக்கள் தமிழர்கள் மீது பயம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். இதனை மகாவம்சமும் சுட்டிக்காட்டுகின்றது.
 
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென வேறு ஒரு நாடு இல்லை. ஆனால் தமிழர்கள் அவ்வாறு இல்லை அவர்கள் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளனர். ஆசிய பிராந்தியத்திற்குள் உள்ள மிகச்சிறிய இனமாக உள்ள தம்மை தமிழ் இனம் விழுங்கிவிடும் என்ற பயம் உள்ளது.
 
ஆகையால் தமிழர் தேசம் என்பதனை இல்லாமல் செய்து இலங்கை தீவு முழுவதையும் தம்முடையதாக்க வேண்டும் என்ற ஆசை சிங்களவர்களுக்கு உண்டு. இந்நிலையிலேயே எமது தேசத்தை அவர்கள் திட்டமிட்டு பலவழிகளில் இல்லாமல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்