கண்டதும் காதலில் விழும் விஜய் - பைரவா சிச்சுவேஷனும், பாடல் வரிகளும்
திங்கள், 7 நவம்பர் 2016 (14:27 IST)
விஜய் நடித்துவரும் பைரவா படத்தில், விஜய்யின் அறிமுகக் காட்சி பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். அதாவது பாடல் வரிகளை. வைரமுத்து எழுதியிருந்த அப்பாடலைத் தொடர்ந்து இன்னொரு பாடலின் வரிகளையும் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பாடலையும் வைரமுத்தே எழுதியுள்ளார். கவிதை தூக்கலாக இருக்கும் இந்தப் பாடலை, அதே கவிதைத்தன்மையுடன் படமாக்கும்படி இயக்குனர் பரதனை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பைரவா கதைப்படி முன்பின் தெரியாத கீர்த்தி சுரேஷை முதலில் பார்த்ததும் அவரது அழகில் விஜய் மயங்கிப் போகிறார். முதல் பார்வையிலேயே காதல் அவருக்குள் பூத்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து இந்தப் பாடல், விஜய் பாடுவதாக படத்தில் வருகிறது.
மயக்கும் அந்த பாடல் வரிகள்...
மஞ்சள் மேகம் ஒரு
மஞ்சள் மேகம் சிறு
பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் என்
கதறும் உயிரும் அவள்
பேர்கேட்டுப் பின்னே போகும்
செல்லப் பூவே நான்
உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய் உயிர்
சிதறக் கண்டேன்
நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
கனவா கனவா நான்
காண்பது கனவா என்
கண்முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா கம்பன்
கவிதை மடலா இவள்
தென்னாட்டின் நான்காம் கடலா
சிலிக்கான் சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ
நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன
செம்பொன் சிலையோ இவள்
ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ இவள்
பெண்பால் வெயிலோ
நான் உன்னைப் போன்ற
பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரில் பாதி
யாரும் கொன்றதில்லை
முன்னழகால் முட்டி
மோட்சம் கொடு இல்லை
பின் முடியால்
என்னைத் தூக்கிலிடு
பாடல் வெளியானால் பலகாலம் அது இளைஞர்களின் தேசிய கீதமாக இருக்கும் என்பதை வரிகள் உணர்த்துகின்றன. சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடலுக்கு மெட்டமைத்து இசையமைத்துள்ளார்.