நடிகர் விக்ரம் திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. 1990 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 -ஆம் தேதி விக்ரம் நடித்த முதல் படம், என் காதல் கண்மணி திரைக்கு வந்தது. 25 ஆண்டுகள் முடிந்தநிலையில் நாளை அக்டோபர் 21 விக்ரம் நடித்துள்ள, 10 எண்றதுக்குள்ள திரைக்கு வருகிறது.
25 வருடங்கள் ஒருவர் திரையுலகில் தாக்குப் பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. விக்ரமைப் போன்ற அதிகம் சினிமா பின்னணி இல்லாத ஒருவர் திரையுலகில் நுழைவதும், தனித்துவத்துடன் நிலைத்து நிற்பதும் அபூர்வம்.
விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படங்களை பார்ப்போம்.
மீரா (1992)
விக்ரமின் திரையுலகப் பிரவேசம் 1990 -இல் நிகழ்ந்தாலும் அவர் திரையுலகில் காலுnன்ற பத்து வருடங்கள் ஆனது. முதல் படத்தைத் தொடர்ந்து 1991 -இல் ஸ்ரீதரின் இயக்கத்தில் தந்துவிட்டேன் என்னை படத்தில் நடித்தார். அதன்பிறகு காவல் கீதம் என்ற படம். விக்ரமை தமிழக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய முதல் படம், பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா. ஐஸ்வர்யாவுடன் விக்ரம் இதில் நடித்திருந்தார். அவரது அலட்டாத நடிப்பும், இளையராஜாவின் இசையும் பாடல்களும் மீராவை கவனிக்க வைத்தன.
உல்லாசம் (1997)
மீராவுக்குப் பிறகு விக்ரமுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அவர் மலையாளத்தில் மம்முட்டி, ஜெயராம், கௌதமியுடன் நடித்த துருவம் பெரும் வெற்றியை பெற்றது. அதில் மம்முட்டிக்காக எதையும் செய்யும் இளைஞர் வேடத்தில் விக்ரம் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் அது உதிரி வேடங்களாகவே இருந்தன.
இந்நிலையில் உல்லாசம் படம் அவருக்கு தமிழில் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அஜித்துடன் இணைந்து விக்ரம் நடித்த இந்தப் படம், நடிக்கத் தெரிந்த நடிகர் என்ற பெயரை விக்ரமுக்கு சம்பாதித்து தந்தது.
சேது (1999)
தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வந்த விக்ரம், திரையுலகில் எப்படியாவது பிடித்து நிற்க வேண்டும் என்பதற்காக அப்பாஸ், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங்கும் பேசினார். இப்படியொரு சந்தர்ப்பத்தில் சேது வெளியானது. பாலாவின் இந்தப் படம் தமிழகத்தில் எப்படியான விளைவை ஏற்படுத்தியது என்பதை சொல்லத் தேவையில்லை.
தில் (2001)
விக்ரமுக்கு சேது அளவுக்கு முக்கியமான படம், தில். சேது படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்த, விண்ணுக்கும் மண்ணுக்கும் சேதுவில் அவர் சம்பாதித்த அனைத்து பெயரையும் குழிதோண்டி புதைத்தது. விக்ரம் இனி
மேலும் அடுத்தப் பக்கத்தைப் பார்க்க...
அவ்வளவுதானா என்று நினைத்திருந்த நேரத்தில் தில் வெளியாகி விக்ரமின் ஆக்ஷன் முகத்தை காட்டியது.
சாமி (2003)
தில்லுக்குப் பிறகு வெளியான காசி விக்ரமின் நடிப்புத் திறமையை உறுதி செய்தது. அதன் பிறகு தூள் படம் இன்னொரு வெற்றியாக அமைந்தது. என்றாலும், சாமி படமே பட்டிதொட்டியெங்கும் விக்ரமின் பெயரை ஆழப்பதித்தது. அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் நிலைநிறுத்தியது.
பிதாமகன் (2003)
சாமி வெளியான அதே வருடம் பிதாமகன் வெளியாகி விக்ரமுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. விக்ரமின் கரியரை பார்க்கையில் அவர் சில மோசமான படங்களை மட்டுமே செய்திருப்பது தெரியவரும்.
அந்நியன் (2005), ஐ (2015)
பிதாமகனுக்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் நடித்த அந்நியன் விக்ரமின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்தது. அதன் பிறகு நடித்த மஜா, பீமா, கந்தசாமி, ராவணன் ஆகிய படங்கள் சோபிக்கவில்லை. பீமாவில் அவர் 3 வருடங்களை தேவையில்லாமல் இழந்தார். இந்த நெடும் தோல்விகளுக்குப் பிறகு தெய்வத்திருமகள் மட்டுமே ஆறுதளித்தது.
அதன் பிறகு வந்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் போன்ற படங்களும் ஏமாற்றத்தை தந்தன. ஷங்கரின் ஐ படம்தான் அந்த தோல்விகளின் கணக்கை நிறுத்தியது.
கடந்த 2005 -க்குப் பிறகு விக்ரம் நடித்த சில படங்கள் மட்டுமே வர்த்தகரீதியில் வெற்றி பெற்றன. சுமார் படங்களுக்கு வருடக்கணக்கில் அவர் உழைத்ததும் வீணானது. இனிவரும் காலங்களில் குறைவான நேரத்தில் நிறைவான படங்களை அவர் தருவார் என நம்புவோம்.