தூங்கா வனம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்?

ஜே.பி.ஆர்.

சனி, 7 நவம்பர் 2015 (09:23 IST)
நவம்பர் 10 -ஆம் தேதி தூங்கா வனம் வெளியாகிறது.
 
கமல், பிரகாஷ்ராஜ், த்ரிஷா, சம்பத், கிஷோர், யூகி சேது நடித்துள்ள இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 
 
காரணங்களைப் பார்ப்போம்.


 

 
1. தமிழ் சினிமாவில் காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்திருக்கும். தனித்தனி ஜானர்களில் காமெடி, ஆக்ஷன், காதல் படங்கள் வருவது அபூர்வமான நிகழ்வு.
 
தூங்கா வனம் காதல், காமெடி, சென்டிமெண்ட் எதுவுமில்லாத ஆக்ஷன் த்ரில்லர். இவ்வகை படங்கள் தமிழில் அரிதிலும் அரிது.
 
2. ஸ்லீப்லெஸ் நைட் என்ற ப்ரெஞ்ச் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமைகளை முறைப்படி வாங்கி கமல் இந்தப் படத்தை தயாரித்து நடித்துள்ளார். வெளிநாட்டுப் படம் ஒன்றின் உரிமையை கமல் முறைப்படி வாங்கி ரீமேக் செய்வது இதுவே முதல்முறை.
 
தமிழ் சினிமாவுக்கும் இதுவே முதல்முறை (ஆனால், வெளிநாட்டுப் படமொன்றின் உரிமையை முறையாக வாங்கிய முதல் தமிழ்ப்பட இயக்குனர், நலன் குமாரசாமி.
 
மை டியர் டெஸ்பரடோ என்ற தென்கொரிய படத்தின் உரிமையை வாங்கி, காதலும் கடந்து போகும் என்ற பெயரில் எடுத்து வருகிறhர். முதலில் உரிமை வாங்கினாலும், முதலில் வெளியாகி தூங்கா வனம் பெயரை தட்டிச் செல்கிறது).
 
3. ஸ்லீப்லெஸ் நைட் படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது. தற்போது ஹாலிவுட்டில் அதனை ரீமேக் செய்து வருகின்றனர்.
 
4. தூங்கா வனம் ஓர் இரவில் நடக்கும் கதை. சில காட்சிகள் மட்டுமே பகலில் வரும். படத்தின் 90 சதவீத காட்சிகள் இரவு விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எடுத்திருப்பது தமிழில் இதுவே முதல்முறை.
 
5. ப்ரெஞ்ச் படத்துக்கு சண்டைக் காட்சிகள் அமைத்த ஜில்ஸ் கன்சில் தூங்கா வனத்தின் சண்டைக் காட்சிகளையும் அமைத்துள்ளார். மிக தத்ரூபமாக சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
6. படத்தின் கேமரா நகர்வும், ஒளிப்பதிவும்..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

அற்புதமாக வந்திருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது. படத்தின் ட்ரெய்லரும் அதனை உறுதி செய்கிறது. ஸ்லீப் லெஸ் நைட்டின் கேமராவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்கு அது நல்ல விருந்தாக இருக்கும்.


 

 
7. த்ரிஷா முதல்முறையாக ஆக்ஷன் படமொன்றில் சண்டையெல்லாம் போட்டு நடித்துள்ளார். கமலும், த்ரிஷாவும் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சியொன்று படத்தில் உள்ளது. கமலுக்கு இணையாக த்ரிஷா சண்டையிடுவதாக இந்தக் காட்சியை எடுத்துள்ளனர்.
 
8. ஜிப்ரானின் இசை தூங்கா வனத்தின் முக்கிய தூண்களில் ஒன்று. படத்தில் பாடல்கள் இல்லை. ஒரேயொரு விளம்பரப் பாடலை வைரமுத்து எழுத கமல் பாடியுள்ளார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் த்ரில்லை உருவாக்குவதில் இசையின் பங்கு அதிகம்.
 
9. பிரகாஷ்ராஜ் இரவு விடுதி நடத்தும் போதைப் பொருள் கடத்தல்காரராகவும், யூகி சேதுவும், கிஷோரும் அதற்கு உடைந்தையான போலீஸ் அதிகாரிகளாகவும், சம்பத் கேங்ஸ்டர் தலைவராகவும், த்ரிஷா நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இவ்வளவு சிறந்த நடிகர்கள் ஒரே படத்தில் இருப்பதும் அபூர்வம்தான்.
 
10. கடைசி காரணம் என்றாலும், இதுதான் முதல் காரணம், கமல்ஹாசன். கமல் நடித்திருக்கிறார் என்பதே தூங்கா வனம் படத்தைப் பார்ப்பதற்கான முதல் காரணம். உத்தம வில்லனைப் போல் கமலே நினைத்தாலும் சொதப்ப முடியாத திரைக்கதை தூங்கா வனம். நம்பிப் பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்