தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சி

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (11:28 IST)
நம்பர் நடிகையின் காதலர் இயக்கும் படத்தில் பிரகாச நாயகன் நடிக்கிறார். இந்த செய்திக்குப் பின்னாலுள்ள திரைமறை விஷயங்களைத்தான் கோடம்பாக்கத்தில் கூடிக் கூடி பேசுகிறார்கள்.


 
 
ரௌடி படத்தின் மூலம் நம்பர் நடிகையின் காதலரான சிவனுக்கு நல்ல பிரேக் கிடைத்தது. அவர் இயக்குகிறார் என்றால் நடிக்க பலரும் தயார். ஆனால், காதலரின் விருப்பம் தலயை இயக்குவது. காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற தலயிடம் தூது அனுப்பியிருக்கிறார் நம்பர் நடிகை. ஆனால், எதிர்தரப்பில் நோ ரெஸ்பான்ஸ்.
 
கடைசியில் நடிகையே தலயை சந்தித்து, தனது காதலருக்கு படம் நடித்துத் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் வளைவே இல்லாத நேர்கோடாக இருக்கும் தல, அது சாத்தியமில்லை என்று காரண காரியங்களுடன் கூறியிருக்கிறார். ஏமாற்றமடைந்த நடிகை அடுத்து, பிரகாச நடிகரிடம் வந்துள்ளார்.
 
பிரகாச நடிகர், கௌதம இயக்குனரின் படத்திலிருந்து விலகிய போது, இயக்குனரை வாலன்ட்ரியாக அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் தல. இப்போது தல ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு மறுத்துள்ளார். விடுவாரா பிரகாச நடிகர்? உடனே ஓகே சொன்னதோடு, லயன் முடிந்ததும் சிவன் படம்தான் என்று நடிகையிடம் உறுதியளித்திருக்கிறார். 
 
இந்த ஈகோ காரணமாக பாதிக்கப்பட்டிருப்பவர், சாதிய கொம்பு சீவும் படங்களை எடுத்து வரும் இயக்குனர். அவர்தான் பிரகாச நடிகரை அடுத்து இயக்குவதாக இருந்தது. நடிகை இடையில் புகுந்ததால் அவரது படம் தள்ளிப் போயிருக்கிறது.
 
இந்த கதை இப்படியென்றால், இரண்டு முகம் கொண்டவரின் கதை வேறு மாதிரி. அவர் நடித்த ஓரெழுத்துப் படம், பிரமாண்ட இயக்குனர் காரணமாக தறி கெட்டு ஓடியது. அதனை நடிகரின் வெற்றி என்று சொல்ல முடியாது. அடுத்து அவசர கோலத்தில் பத்து எண்றதுக்குள்ள ஒரு படத்தில் நடித்தார். படம் பப்படம். அதிகம் எதிர்பார்த்த இரண்டு முகத்துக்கும் சரியான முகவுரை எழுதவில்லை பத்திரிகைகள். நடிகர் நல்லா நடிச்சிருக்கார் என்று சர்ட்டிபிகெட் தருகிறவர்களும் படத்தின் இரண்டாம் பகுதி குறித்து எதிர்மறையாகவே எழுதியுள்ளனர்.
 
இனி எந்த மாதிரி படத்தில் நடித்தால் எடுபடும் என்ற தீராத குழப்பத்துக்கு நடிகர் ஆளாகியிருக்கிறார். நடிக்கத் தெரிந்தவர்களின் நிலையே இப்படியென்றால்... கஷ்டம்தான் சினிமாவில் நீடிப்பது.

வெப்துனியாவைப் படிக்கவும்